விடுமுறை விட மறுத்த பள்ளிகள்

பொங்கல் பண்டிகைக்கான விடுமுறையில், கேந்திரிய வித்யாலயா உள்ளிட்ட சி.பி.எஸ்.இ., பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் வகுப்புகளை அறிவித்துள்ளன.

பொங்கல் பண்டிகை, நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக, தமிழக அரசு, நேற்று முதல், 16ம் தேதி வரை, பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுப்பு அளித்துள்ளது.
ஆனால், சில தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் மற்றும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், அரசு உத்தரவை மீறி, நேற்று வகுப்புகள் நடத்தப்பட்டு உள்ளன.
சில பள்ளிகள், 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு மட்டும், சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்திஉள்ளன.
நாளை ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கவும், நாளை மறுநாள், சிறப்பு வகுப்புகள் நடத்தவும், சில பள்ளிகள் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் உள்ள உறைவிட பள்ளிகள், வழக்கம்போல் இயங்கியதாகக் கூறப்படுகிறது.