டெபிட் கார்டு, பீம் செயலி சலுகை அமலுக்கு வந்தது

டெபிட் கார்டு, பீம் செயலி மூலம் ரூ.2,000 வரை பொருள்களை வாங்கினால் அதற்கு வர்த்தகர்கள் எவ்விதக் கட்டணமும் செலுத்த வேண்டாம் என்ற சலுகை திங்கள்கிழமை முதல் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய
நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
 பொருள்கள் விற்பனையில் டெபிட் கார்டு, பீம் செயலி வாயிலான பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் வகையில், புதிய சலுகையை வழங்க மத்திய அரசு கடந்த வாரம் முடிவு செய்தது. அதன்படி, ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு, வங்கிகளுக்கான எம்டிஆர் கட்டணத்தை வர்த்தகர்கள் செலுத்த வேண்டியதில்லை; அதனை, அரசே ஏற்க முடிவு செய்யப்பட்டது.
 இந்நிலையில், மத்திய நிதித்துறை அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை செயலாளர் ராஜீவ் குமார் சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்டுள்ள பதிவில், "டிஜிட்டல் 2018 மகிழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. டிசம்பருடன் முடிந்த காலாண்டில் பீம் செயலி மூலம் நடைபெற்ற பரிமாற்றம் 86 சதவீதம் அதிகரித்து ரூ.13,174 கோடியாக உள்ளது' என்று கூறியுள்ளார்.
 பொருள்கள் விற்பனையின்போது, டெபிட், கிரெடிட் கார்டு, பீம் செயலி உள்ளிட்ட மின்னணு பரிவர்த்தனை சேவையை வழங்குவதற்காக வர்த்தகர்களிடம் வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. இக்கட்டணம், எம்டிஆர் என்றழைக்கப்படுகிறது.

 பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற மத்திய அமைச்சரவையின் கூட்டத்தில், பொருள்களின் வர்த்தகத்தில் டெபிட் கார்டு, பீம் செயலி பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் புதிய சலுகையை வழங்குவதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, ரூ.2,000 வரையிலான பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளுக்கான எம்டிஆர் கட்டணத்தை வர்த்தகர்கள் செலுத்த வேண்டியதில்லை; அதனை, அரசே ஏற்க முடிவு செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி வரை இச்சலுகையை வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்தது.