போலியோ சொட்டு மருந்து வரும், 28ல் முகாம்

சென்னை:ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து முகாம், ஜன., 28ல் நடைபெற உள்ளது.

தமிழகத்தில், போலியோ சொட்டு மருந்து முகாம்கள் சிறப்பாக நடைபெறுவதால், 14வது ஆண்டாக தொடர்ந்து, போலியோ இல்லாத மாநிலமாக உள்ளது. அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள், பஸ் நிறுத்தங்கள், திரையரங்குகள்... வணிக வளாகங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற, மக்கள் அதிகம் கூடும் இடங்களில், போலியோ முகாம் நடத்த, தமிழக சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.
முதற்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம், 45 ஆயிரம் மையங்களிலும், நடமாடும் குழுக்கள் வழியாகவும் நடத்தப்படுகிறது. இந்த பணிகளில், இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுகின்றனர்.
இது குறித்து, பொது சுகாதாரத்துறை இயக்குனர், குழந்தைசாமி கூறியதாவது:
தமிழகம் முழுவதும், 70 லட்சம் குழந்தைகளுக்கு, போலியோ சொட்டு மருந்து கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்ட முகாம், வரும், 28ல் நடைபெறுகிறது. இதை தொடர்ந்து, இரண்டு நாட்கள், விடுபட்ட குழந்தைகளுக்கு, வீடு வீடாக சென்று போலியோ சொட்டு மருந்து போடும் பணி நடைபெறும்.
பின், ஒரு வாரம், அரசு மருத்துவமனைகளில் மட்டும் போலியோ மருந்து தரப்படும். இரண்டாம் கட்ட முகாம், மார்ச், 11ம் தேதி நடைபெற உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.