2017-ஆம் ஆண்டின் தமிழகம்

ஜனவரி
3 புதுச்சேரி சட்டப் பேரவை முன்னாள் தலைவர் வி.எம்.சி.சிவகுமார் காரைக்கால் அருகே வெட்டிக் கொலை.

4 அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் கட்சியின் செயல் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாகத் தேர்வு.
6 அந்நிய செலாவணி வழக்கில் டிடிவி தினகரனுக்கு அமலாக்கத் துறை விதித்த ரூ. 28 கோடி அபராதத்தை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
17 எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி, தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற விழாவில் அஞ்சல் துறை சார்பில் வெளியிடப்பட்ட எம்ஜிஆரின் உருவம் பொறித்த சிறப்பு தபால் தலையை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெற்றுக் கொண்டார்.
23 தமிழக சட்டப் பேரவையில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக 1960-ஆம் ஆண்டு மிருகவதை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சட்டம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
28 சென்னை எண்ணூர் கடல் பகுதியில் எரிவாயு கொண்டு சென்ற கப்பலும், டீசல் கொண்டு சென்ற கப்பலும் மோதிக் கொண்ட விபத்தில் கச்சா எண்ணெய் கலந்ததால் கடல் கடுமையாக மாசுபட்டது.
31 நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி தமிழக சட்டப் பேரவையில் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
பிப்ரவரி
5 அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வி.கே.சசிகலா தமிழக சட்டப் பேரவை குழுத் தலைவராக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, அவர் முதல்வராகும் விதமாக ஓ.பன்னீர்செல்வம் தனது முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார்.
8 சென்னை முகலிவாக்கத்தில் 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து எரித்துக் கொன்ற வழக்கில் இளைஞர் தஷ்வந்த்தை போலீஸார் கைது செய்தனர்.
14 சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து, அதிமுக சட்டப் பேரவை குழுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி கே.பழனிசாமியை ஆட்சி அமைக்குமாறு பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுத்தார்.
16 தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி கே.பழனிசாமியுடன் 30 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
18 சட்டப் பேரவையில் நடைபெற்ற நம் பிக்கை வாக்கெடுப்பில் 122 எம்எல்ஏக்களின் வாக்குகளைப் பெற்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெற்றி பெற்றார்.
18 சட்டப் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, தாக்கப்பட்டதாகக் கூறி, எதிர்க்கட்சித் தலைவரும், திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின், திமுக எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் மெரீனாவில் உண்ணாவிரதம் இருந்தனர்.
20 முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி கே.பழனிசாமி பணியின் முதல் நாளில் 500-க்கும் மேற்பட்ட மதுக் கடைகளை மூடுவது உள்ளிட்ட 5 முக்கிய தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாக கையெழுத்திட்டார்.
23 அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளராக டி.டி.வி, தினகரன் பொறுப்பேற்றார்.
24 எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை என்ற அமைப்பை ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தொடங்கினார்.
மார்ச்
11 விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பெண்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்தனர்.
13 தமிழகத்தில் உள்ள நீர்நிலைகளை மேம்படுத்தும் விதமாக ரூ. 100 கோடியில் 30 மாவட்டங்களில் குடிமராமத்து திட்டத்தை காஞ்சிபுரத்தில் முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
ஏப்ரல்
2 தருமபுரி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக முதல் திருநங்கை பிரித்திகா யாசினி பணி அமர்த்தப்பட்டார்.
5 சொத்துக் குவிப்பு வழக்கில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில் அவரை குற்றவாளி என பிரகடனம் செய்ய முடியாது என உச்ச நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பை அளித்தது.
5 சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பதவியேற்றார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் இந்திரா பானர்ஜிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
7 ஆர்.கே.நகர் சட்டப் பேரவை தொகுதி இடைத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததாக எழுந்த புகாரின் பேரில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார் வீடு, நிறுவனங்கள் என 50 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தினர்.
17 அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் வழங்கியதாக தினகரன் மீது தில்லி குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இது தொடர்பாக தில்லியைச் சேர்ந்த இடைத் தரகர் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டார்.
23 தில்லி ஜந்தர்மந்தரில் 41 நாள்களாகப் போராடிய விவசாயிகளை முதல்வர் பழனிசாமி நேரில் சந்தித்து போராட்டத்தைக் கைவிட கோரிக்கை விடுத்தார். இதையடுத்து விவசாயிகள் போராட்டம் தாற்காலிமாக கைவிடப்பட்டது.
24 மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவின் காவலாளி ஓம் பகதூர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
25 தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக தொடரப்பட்ட வழக்கில், 4 நாள் விசாரணைக்குப் பிறகு அதிமுக துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் தில்லி போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.
மே
6 மருத்துவப் பட்ட மேற்படிப்புகளில் மருத்துவ கவுன்சில் விதிப்படி அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கவுன்சில் விதிப்படி அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இடஒதுக்கீடு தர முடியாது. தமிழக அரசு, இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன் உத்தரவிட்டார்.
10 பிளஸ் 2 தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்கள் பட்டியல் வெளியிடப்பட மாட்டாது. இதன் மூலம் மாணவர்கள் தேர்வு முடிவுகளால் ஏற்படும் மனஅழுத்தத்தில் இருந்து விடுபடுவர் என்று மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவித்தார்.
14 சென்னையில் நேரு பார்க் முதல் அண்ணாநகர் பகுதியில் அமைந்துள்ள திருமங்கலம் வரை சுரங்க ரயில் பாதையை மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
31 சென்னை, தியாகராய நகரில் உள்ள பிரபல சென்னை சில்க்ஸ் துணிக் கடை யில் தீ விபத்து ஏற்பட்டு, 10 மணி நேர போராட்டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் அந்தத் துணிக்கடை முழுவதும் தீக்கிரையானது.
ஜூன்
8 தமிழகத்தில் நடைமுறையில் உள்ள சொத்துக்களுக்கான சந்தை மதிப்பு வழிகாட்டியை அனைத்து இனங்களுக்கும் 9.6.2017 முதல் 33 சதவீதம் அளவுக்கு குறைத்து பத்திரப் பதிவுத் துறை அறிவிப்பு வெளியிட்டது.
16 அம்மா உணவகம், அம்மா உப்பு, அம்மா சிமென்ட், அம்மா குடிநீர் போன்று பொது மக்களின் பயன்பாட்டுக்கு 10 இடங்களில் அம்மா பெட்ரோல் பங்க் தொடங்கப்படும் என்று உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் ஆர். காமராஜ் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தில் அறிவித்தார்.
25 பொது மக்கள் பயன்பாட்டுக்கு போரூர் மேம்பாலத்தைத் திறந்து வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. அந்தப் பாலத்துக்கு பாரத ரத்னா புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மேம்பாலம் என பெயரிடப்பட்டது.
ஜூலை
14 தஞ்சாவூர் அருகே பழுதாகி நின்ற சரக்கு ஆட்டோ மீது அரசு பேருந்து மோதியது. இதில் 9 பேர் உயிரிழந்தனர்; 18 பேர் காயமடைந்தனர்.
14 தமிழ்நாடு சொத்து உரிமையாளர்கள், வாடகைதாரர்களின் உரிமைகள், பொறுப்புகள் முறைப்படுத்துதல் சட்டம் 2017- மசோதாவை சட்டப் பேரவையில் வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார்.
16 சென்னை கொடுங்கையூர் கவியரசு கண்ணதாசன் நகரில் உள்ள பேக்கரியில் எரிவாயு உருளை வெடித்ததில் விருதுநகர் மாவட்டத்தில் இருந்து தாற்காலிகப் பணியிட மாறுதலில் வந்த ஏகராஜ் என்ற தீயணைப்பு வீரர் உயிரிழந்தார். இந்த விபத்தில் போலீஸ், பொதுமக்கள் என 47 பேர் காயமடைந்தனர்.
25 தமிழக பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் கட்டாயமாக வந்தே மாதரம் பாடலை பாட வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
27 முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்தில் ரூ.20 கோடியில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபத்தை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
27 சிவகங்கை மாவட்டம், கீழடியில் கண்டெடுக்கப்பட்ட 2 பொருள்கள் அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டன. அதில், அப்பொருள்கள் 2, 160, 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என மத்திய கலாசாரம், சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா எழுத்துப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டார்.
ஆகஸ்ட்
16 நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு ஓராண்டு விலக்கு கோரும் அவசரச் சட்டத்துக்கு மத்திய அரசின் தலைமை வழக்குரைஞர், சட்ட அமைச்சகம், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் ஆகியவை ஒப்புதல் அளித்தன.
17 மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த பெண் போராளி இரோம் ஷர்மிளாவுக்கும், பிரிட்டனைச் சேர்ந்த தேஸ்மந்த் கொட்டின்கோ என்பவருக்கும் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் சார் பதிவாளர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருமணம் நடைபெற்றது.
17 ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு.
21 கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவுக்கு எதிராக தனி அணியாகச் செயல்பட்டு வந்த ஓ.பன்னீர்செல்வம், , முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அணியுடன் இணைந்ததையடுத்து, அவருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
22 எடப்பாடி கே.பழனிசாமி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெறுவதாக ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேர் கடிதம் அளித்தனர்.
24 ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் உள்ள பேரறிவாளன் சிகிச்சை பெற வசதியாக தமிழக அரசு நிபந்தனையுடன் கூடிய பரோல் அளித்தது.
30 ப்ளூவேல்' எனப்படும் நீலத்திமிங்கல இணையதள விளையாட்டுக்கு மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் விக்னேஷ் பலியானார்.
செப்டம்பர்
1 நீட் தேர்வை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.
6 நிலஅபகரிப்பு வழக்கு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி, அவரது 58 உறவினர்களை விடுவித்து அமர்வு நீதிமன்றம் பிறபித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
7 கோவை சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து 5 பேர் சாவு: பலத்த காயமடைந்த 19 பேருக்கு தீவிர சிகிச்சை.
12 சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் சசிகலா நியமனத்தை ரத்து செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
14 பறிமுதல் செய்யப்பட்ட சிலைகளை விற்பனை செய்ததாக காவல் துணைக் கண்காணிப்பாளர் காதர் பாஷாவை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
18 தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து தமிழக சட்டப் பேரவைத் தலைவர் பி.தனபால் உத்தரவிட்டார்.
24 கடன் பிரச்னை காரணமாக மதுரையில் ஒரே குடும்பத்தைச் 8 பேர் தற்கொலை செய்துகொள்வதற்காக விஷம் அருந்தினர். அதில் 5 பேர் உயிரிழந்தனர்.
30 தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார்.
அக்டோபர்
4 தமிழகத்தின் தாவூத் இப்ராஹிம் என அழைக்கப்பட்ட காஞ்சிபுரத்தைச் சேர்ந்த டான் ஸ்ரீதர் தனபால் கம்போடியாவில் தற்கொலை.
20 நாகப்பட்டினம் மாவட்டம், பொறையாறில் பராமரிப்பு இல்லாத தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து பணிமனைக் கட்டடம் இடிந்து விழுந்தது. இந்த கட்டடத்தில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த ஓட்டுநர்கள், நடத்துநர்கள் உள்ளிட்ட 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்.
23 கந்துவட்டி கொடுமையால் பாதிக்கப்பட்ட கூலித் தொழிலாளி இசக்கிமுத்து (30), தனது மனைவி சுப்புலட்சுமி (28), மகள்கள் மதிசாருண்யா (4), அட்சயபரணிகா (2) ஆகியோருடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்தார்.
24 உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர், கட்அவுட் வைக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
27 தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஏ. ஆறுமுகசாமி பொறுப்பேற்பு.
நவம்பர்
1 ஸ்ரீரங்கம் ஸ்ரீ ரங்கநாதசுவாமி திருக்கோயிலுக்கு முதன்முறையாக யுனெஸ்கோ அமைப்பு விருது அறிவிப்பு.
2 சென்னையில் கடந்த 41 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் 300 மி.மீ. அளவுக்கு பலத்த மழை பெய்தது.
7 மக்கள் பிரச்னைகளை விவாதிக்க "மையம் விசில்' என்னும் செல்லிடப்பேசி செயலியை அறிமுகம் செய்தார் நடிகர் கமல்ஹாசன்.
17 வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோரின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனையிட்ட வருமான வரித் துறை அதிகாரிகள், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்திலும் சோதனை மேற்கொண்டனர்.
17 சொகுசு கார் இறக்குமதி செய்யப்பட்ட வழக்கில் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் வி.கே.சசிகலாவின் கணவர் எம்.நடராஜனுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் 2010-இல் அளித்த 2 ஆண்டு சிறைத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.
23 அதிமுக பெயரையும், இரட்டை இலை சின்னத்தையும் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு ஒதுக்கீடு செய்து இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது.
30 ஒக்கி புயலால் கன்னியாகுமரி உள்பட தமிழகத்தின் தென் மாவட்டங்கள் மற்றும் கேரள கடலோர பகுதிகளில் பேரிழப்பு. நூற்றுக்கணக்கான மீனவர்கள் மாயம்.
டிசம்பர்
12 உடுமலை சங்கர் ஆணவக் கொலை வழக்கில் கௌசல்யாவின் தந்தை உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
13 சென்னையில் நகைகளைக் கொள்ளையடித்து விட்டு ராஜஸ்தானுக்கு தப்பிய கொள்ளையர்களைப் பிடிக்கச் சென்ற மதுரவாயல் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
20 மறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற விடியோ பதிவை வெளியிட்டார் டிடிவி தினகரன் ஆதரவாளர் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் பி.வெற்றிவேல்.
24 ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட டிடிவி தினகரன் அபார வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் திமுக வைப்புத்தொகையை இழந்தது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்!