பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பிளஸ்-2 செல்லலாம்

பிளஸ்-1 வகுப்புக்கு முதல் முதலாக இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறாவிட்டாலும் அவர்கள் பிளஸ்-2 செல்லலாம் என தேர்வுத்துறை அதிகாரி தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும், பிளஸ்-2 தேர்வும் அரசு பொதுத்தேர்வுகளாக நடத்தப்படுகின்றன. பிளஸ்-1 தேர்வு சாதாரண தேர்வாகத்தான் கடந்த ஆண்டு வரை நடத்தப்பட்டு வந்தது.

இதனால் பிளஸ்-1 வகுப்பு பாடங்களை ஆசிரியர்கள் சரிவர நடத்துவதில்லை என்றும், பல தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 பாடம் அறவே நடத்தப்படுவதில்லை என்றும் புகார்கள் வந்தன. ஆனால் நீட் தேர்வில் பிளஸ்-1 வகுப்பில் உள்ள பாடத்தில் இருந்து நிறைய வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன.

இதையடுத்து பிளஸ்-1 வகுப்புக்கும் 2018 மார்ச் மாதம் முதல் அரசு பொதுத்தேர்வு நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. எனவே இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கு அரசு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில் பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றாலும் பிளஸ்-2 வகுப்புக்கு செல்லலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பிளஸ்-1 பொதுத்தேர்வில் சில பாடங்களில் தோல்வியுறும் மாணவர்கள் ஆண்டு விரயமின்றி பிளஸ்-2 வகுப்புக்கு செல்லவும், தோல்வியுற்ற பாடங்களை ஜூன் மாதம் நடைபெறும் உடனடி சிறப்பு தேர்விலோ அல்லது பிளஸ்-2 இறுதி ஆண்டு தேர்வின் போதோ எழுதலாம் எனவும் தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்தார்.