பிளஸ் 1 தனி தேர்வு 17 முதல், 'தத்கல்' பதிவு

சென்னை: நேரடியாக, பிளஸ் 1 தேர்வு எழுத, வரும், 17 முதல், 19ம் தேதி வரை, தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.


அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அறிவிப்பு: வரும் மார்ச்சில் நடக்கவுள்ள, பிளஸ் 1 பொது தேர்வை, தனித்தேர்வராக எழுத விரும்புவோர் விண்ணப்பிக்க, ஏற்கனவே கால அவகாசம் வழங்கப்பட்டது. அதில் விண்ணப்பிக்காதவர்கள், தத்கல் முறையில், 17ம் தேதி முதல், 19 வரை, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம். இதற்காக, கல்வி மாவட்ட வாரியாக, சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு சென்று, www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும்.
இந்த தேர்வு எழுத, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, குறைந்தபட்சம், ஓராண்டு இடைவெளியும், 15 வயது பூர்த்தியும் ஆகியிருக்க வேண்டும். கூடுதல் விபரங்களை, மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.