குழந்தைகள் அறிவியல் மாநாடு சென்னையில் இன்று துவக்கம்

மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத்துறை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும், குழந்தைகளுக்கான தேசிய அறிவியல் மாநாடு, சென்னையில், இன்று துவங்குகிறது. சோழிங்கநல்லுாரில் உள்ள சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில், இந்த மாநாடு நடத்தப்படுகிறது.


தமிழகம் முழுவதும், அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மாவட்ட வாரியாக நடத்தப்பட்ட அறிவியல் கண்காட்சியில் தேர்வு செய்யப்பட்ட, 150க்கும் மேற்பட்ட மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல் செய்முறை திட்டங்கள், பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.இன்று மாலை, 4:00 மணிக்கு, அறிவியல் விழிப்புணர்வு பேரணியை, மாணவர்கள் நடத்த உள்ளனர். இதில், கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. மாலை, 5:00 மணிக்கு, மாநாடு துவங்குகிறது.