TEACHERS TET/TRB 3 லட்சம் ஆசிரியர்களுக்கு சிக்கல் 'TET' தகுதி தேர்வை முடிக்க கெடு

தனியார் பள்ளிகளில் பணியாற்றும், மூன்று லட்சம் ஆசிரியர்கள், பணியில் நீடிக்க,
ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வை, 2019 மார்ச்சுக்குள் முடிக்க வேண்டும்' என, கெடு விதிக்கப்பட்டுள்ளது.
அதனால், தனியார் பள்ளி 
ஆசிரியர்களை உஷார்படுத்தும்படி, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கடந்த, 2010 முதல், மத்திய அரசின் தேசிய கல்வியியல் கவுன்சில் உத்தரவுப்படி, அனைத்து மாநிலங்களிலும், ஆசிரியர் பணிக்கு, 'டெட்' தகுதித் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டது. இதையொட்டி, தமிழகத்திலும் ஆசிரியர் பணிக்கு, 'டெட்' தேர்வு அறிமுகமானது.

கட்டாயம்

'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கே, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஆசிரியர் பணியில் சேர அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், 'அரசு பள்ளிகள் மட்டுமின்றி, தனியார் பள்ளிகளின் ஆசிரியர்களும், 'டெட்' தேர்வை முடிக்க வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதன்படி, தனியார் பள்ளிகளில் பணியாற்றும், மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், 2019 மார்ச்சுக்குள், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, 1 - 5ம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், 'டிப்ளமா' கல்வியியல் படிப்பு முடிக்காவிட்டால், அவர்கள், மத்திய அரசின் தேசிய திறந்தநிலை பள்ளியின், 'டிப்ளமா' கல்வியியல் படிப்பை, 'ஆன்லைனில்' முடிக்க, புதிய படிப்பு துவங்கப்பட்டு உள்ளது.இந்த ஆண்டுக்கான, டிப்ளமா படிப்பிற்கான மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. வரும் வாரங்களில், ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்பட உள்ளன. 'இந்த படிப்பை முடித்த பின், தனியார் பள்ளி ஆசிரியர்கள், 2019 மார்ச்சுக்குள், 'டெட்' தேர்வையும் முடிக்க வேண்டும்' என, தொடக்கக் கல்வித் துறை அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

அறிவுறுத்தல்

அதே போல், எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், பி.எட்., படிப்பை முடித்திருந்தாலும், அவர்களும், 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என, அறிவுறுத்தப்படு உள்ளது.

இது குறித்து, தனியார் பள்ளிகளுக்கு, தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி, மாவட்ட மெட்ரிக் ஆய்வாளர் ஆகியோர், 'டெட்' தேர்வு விதிமுறைகள் குறித்து, தனியார்பள்ளி நிர்வாகத்தினருக்கு தெரிவிக்க வேண்டும் என, தொடக்கக் கல்வி இயக்குனரகமும், மெட்ரிக்இயக்குனரகமும் அறிவுறுத்தி உள்ளது.