'குரூப் - 4' விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

சென்னை: அரசுத்துறைகளில், 'குரூப் - 4' பதவிக்கான எழுத்து தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்றே கடைசி நாள்.

அரசுத்துறைகளில், குரூப் - 4 பதவியில், காலியாக உள்ள, 9,351 பணியிடங்களை நிரப்ப, பிப்., 11ல் எழுத்து தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. கிராம நிர்வாக அதிகாரி பதவிக்கான, 494 இடங்களும், முதன்முதலாக இந்த தேர்வில் இணைக்கப்பட்டுள்ளன. தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில், நவ., 14ல் துவங்கி, இன்றுடன் முடிகிறது.
இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர் விஜயக்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குரூப் - 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க, இன்று கடைசி நாள். தேர்வு கட்டணத்தை, வரும், 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இதற்காக, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நிரந்தரப்பதிவுக்கும், விண்ணப்ப பதிவுக்கும், தலா, இரண்டு, 'சர்வர்' இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இணையதள அலைவரிசையும்
விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
இன்று இரவு, 11:59 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும். தொழில்நுட்ப பிரச்னையால் விண்ணப்பிக்க முடியாமல் போனால், அதற்கு தேர்வாணையம் பொறுப்பல்ல. பதிவு கட்டணமாக, 150 ரூபாய் செலுத்தி, நிரந்தரப்பதிவு செய்த பின், விண்ணப்பிக்க முடியும். இதுவரை, 15 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.