பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு இன்று தொடங்குகிறது

சென்னை,

பிளஸ்-1 மாணவ, மாணவிகளுக்கு இந்த கல்வி ஆண்டு முதல் அரசு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

இதனையடுத்து இறுதி தேர்வுக்கான கால அட்டவணை முன்கூட்டியே வெளியிடப்பட்டது. அரையாண்டு தேர்வுக்கான கால அட்டவணையும் ஏற்கனவே வெளியிடப்பட்டது.

அதன்படி பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு அனைத்து அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் தொடங்குகிறது. முதல் நாளான இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடக்கிறது.

அரையாண்டு தேர்வில் அனைத்து பாடங்களுக்கும் தமிழ்நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் தயாரிக்கப்பட்டு உள்ளது. தேர்வுகள் 23-ந்தேதி முடிவடையும். இதேபோல் எஸ்.எஸ்.எல்.சி. அரையாண்டு தேர்வு வருகிற 11-ந்தேதி தொடங்கி 23-ந்தேதி முடிவடையும்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலையொட்டி வருகிற 21-ந்தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. எனவே அன்றைய தினம் ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள பள்ளிகள் இயங்காது.

எனவே அன்று நடைபெற வேண்டிய தேர்வு 23-ந்தேதிக்கு பின்னர் நடைபெறும். தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

மேற்கண்ட தகவலை பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.