அடுத்த கல்வி ஆண்டு முதல் ஆன்லைனில் என்ஜினீயரிங் கலந்தாய்வு

தமிழகம் முழுவதும் அண்ணாபல்கலைக்கழகம் அங்கீகாரம் பெற்றுள்ள என்ஜினீயரிங் கல்லூரிகள் 518 உள்ளன. இந்த கல்லூரிகளில் என்ஜினீயரிங் படிப்பில் மாணவ-மாணவிகளுக்கு சேருவதற்கான கலந்தாய்வை அண்ணாபல்கலைக்கழகம் நடத்தி வந்தது. இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, மதுரை, உள்ளிட்ட மாவட்டங்களில் வரும் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.


வெளியூர்களில் உள்ள மாணவ-மாணவிகள் கலந்தாய்வுக்கு வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என்றும் எனவே ஆன்லைனில் கலந்தாய்வை நடத்தவேண்டும் என்றும் அண்ணாபல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் எஸ்.கணேசன் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.அன்பழகனுக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அதன்படி அடுத்த கல்வி ஆண்டு (2018-2019) முதல் என்ஜினீயரிங் கலந்தாய்வை ஆன்லைனில் நடத்த அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. இது குறித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த கலந்தாய்வு 3 வருடங்களுக்கு பொருந்தும். அரசாணையின்படி அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது,

அண்ணாபல்கலைக்கழக பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ் புதிய உறுப்பினர் செயலாளராக சேர்க்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பொறுப்பில் பேராசிரியர் இந்துமதி இருந்தார்.

ஆன்லைனில் கலந்தாய்வை நடத்துவதற்கு வசதியாக புதிய மென்பொருளை வடிவமைக்கும் பொறுப்பு அண்ணாபல்கலைக்கழக பேராசிரியர் குழுவிடம் வழங்கப்பட்டுள்ளது.