பள்ளிகளை தேடி புத்தக கண்காட்சி : கல்வித்துறையில் புதிய முயற்சி

'பள்ளிகளில் புத்தக கண்காட்சி நடத்த ஏற்பாடுகள் செய்தால், தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும்' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும், பள்ளிக்கல்வியில் தரத்தை உயர்த்த, அமைச்சர் செங்கோட்டையன் பல்வேறு திட்டங்களை அறிவித்துஉள்ளார். நுாலக மேம்பாடு மற்றும் புத்தக வாசிப்பை அதிகப்படுத்தவும், புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.



 நுாலகங்களுக்கும், மாணவர்களுக்கும் அரிய வகை புத்தகங்களை வழங்கும் வகையில், புத்தக கொடை திட்டத்தையும், முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். இதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் புத்தக கண்காட்சி நடத்த, புத்தக நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது. பள்ளி வளாகங்களில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், ஒரு நாள் புத்தக கண்காட்சி நடத்தலாம். இதற்கு அதிகாரிகளை அணுகினால், புத்தக தலைப்புகள் மற்றும் தரத்தை பார்த்து, கண்காட்சி நடத்த அனுமதி அளிக்கப்படும் என, பள்ளிக் கல்வி இயக்குனர் இளங்கோவன் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர், கார்மேகம் ஆகியோர் அறிவித்து உள்ளனர்.

கல்வி, ஒழுக்கம், தொழில்நுட்பம், சமூக சிந்தனை, வரலாறு போன்ற வற்றை, மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையிலான புத்தகங்கள் மட்டும், இந்த கண்காட்சியில் அனுமதிக்கப்படும்.

மாணவர்களின் எதிர்காலத்துக்கும், ஒழுக்கத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் எந்த புத்தகங்களையும், கண்காட்சியில் வைக்க முடியாது என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.