குரூப்-4 வினாத்தாள் குழப்பத்தில் மாணவர்கள்

'டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 மற்றும் வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கு ஒரே தேர்வு என அறிவித்துள்ளதால் வினாத்தாளில் மாற்றம் கொண்டு வரப்படுமா' என மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி., சார்பில் குரூப்- 4 மற்றும் வி.ஏ.ஓ., காலிப் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி தகுதியாக உள்ளது. இதனால் 500 காலிப்பணியிடங்கள் அறிவித்தாலும் லட்சக்கணக்கானோர் தேர்வை எழுதுகின்றனர்.



இந்நிலையில் வி.ஏ.ஓ., மற்றும் குரூப்-4 இரண்டையும் ஒரே தேர்வாக நடத்தப்போவதாக டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. பழைய குரூப்-4 தேர்வில் 100 வினாக்கள் தமிழ் அல்லது ஆங்கிலம், 100 வினாக்கள் பொதுஅறிவு பாடம் இடம்பெற்றது.


வி.ஏ.ஓ., தேர்வில் 80 வினாக்கள் தமிழ் அல்லது ஆங்கிலம், 25 வி.ஏ.ஓ., தொடர்பான வினாக்கள், 95 வினாக்கள் பொதுஅறிவு இடம்பெற்றன.
வினாத்தாள் எப்படி இருக்கும்


இந்நிலையில் தற்போது குரூப்-4, வி.ஏ.ஓ., தேர்வை ஒரே தேர்வாக நடத்த திட்டமிட்டுள்ளதால் வினாத்தாள் முறை எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையே ஏற்பட்டுஉள்ளது. 


இதுகுறித்து ஆயக்குடி இலவச பயிற்சி மைய இயக்குனர் ராமமூர்த்தி மற்றும் மாணவர்கள் கூறுகையில், ''புதிய தேர்வில் வினாத்தாளில் மாற்றம் இருக்குமா அல்லது பழைய நிலையே தொடருமா என மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த ஐயத்தை போக்க டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகம் தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்'' என்றனர்.