'கல்வி துறை தணிக்கை தடைக்கு தீர்வு'

''கல்வி அலுவலகங்கள், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், நிலுவையில் உள்ள, நிதிசார் செயல்பாடுகளின் தணிக்கை தடைகள் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மாநில நிதி கட்டுப்பாட்டு அலுவலர் - பள்ளி கல்வி கார்த்திகேயன் தெரிவித்தார்.


மதுரையில், அவர் அளித்த பேட்டி: கல்வித் துறை அலுவலகம், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் நிதிசார் செயல்பாடுகள் குறித்த தணிக்கை, சென்னை, மதுரை, கோவை மண்டல கணக்கு அலுவலகங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன. ஆண்டுதோறும், பள்ளிகள் மீதான, தணிக்கை தடைகள் அதிகரித்து வருகின்றன. தற்போது, மதுரை மண்டலத்தில், ஒரு லட்சத்து, 13 ஆயிரத்து, 297 தணிக்கை தடைகள் உட்பட, மூன்று மண்டலங்களிலும், ஏராளமான தடைகள் நிலுவையில் உள்ளன. செலவினங்களுக்கான உரிய ரசீது மற்றும் ஆவணம் இணைக்காததால் ஏற்படும் தடைகள் தான் அதிகம்; இவை, எளிதில் தீர்க்கப்படும். இதற்காக, மண்டலங்கள் தோறும் கூட்டமர்வுகள் நடத்தி, ஒரே நாளில், ஆயிரக்கணக்கான தடைகளுக்கு தீர்வு காணப்படுகிறது.
மதுரை மண்டல கணக்கு அலுவலகத்தில், 17 மாவட்டங்கள் உள்ளன. மாவட்டங்களின் எண்ணிக்கையை கணக்கில் வைத்து, கருத்துரு வரப்பெற்றால், மாநில அளவில், நான்காவதாக, மண்டல கணக்கு அலுவலகம் உருவாக்க, பரிசீலனை செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.