அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர் பணியிடம் 'சரண்டர்' செய்ய உத்தரவு

தமிழகத்தில் அரசு உதவிபெறும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள,, உபரி ஆசிரியர் பணியிடங்களை, உடனடியாக 'சரண்டர்' செய்ய கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில், மாணவர் சேர்க்கை அடிப்படையில், ஒவ்வொரு ஆண்டும் ஆக.,1ன்படி ஆசிரியர், மாணவர் விகிதம் நிர்ணயிக்கப்படுகிறது. அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை எண்ணிக்கைக்கு ஏற்ப இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் உபரியாக அறிவிக்கப்பட்டு, ஆசிரியர் தேவைப்படும் பள்ளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் பணிமாறுதல் நடக்கிறது. 



ஆனால் இந்தாண்டு, முதன்முறையாக 1600 உபரி பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், முதுநிலை பணியிடங்களாக தரம் உயர்த்தி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல், அரசு உதவிபெறும் பள்ளிகளில் தொடக்க மற்றும் நடுநிலை, உயர்நிலை பள்ளிகளின் உபரி ஆசிரியர் விவரம் கணக்கிடப்பட்டு ஆசிரியர் தேவையுள்ள பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.
ஆனால் இந்தாண்டு முதன்முறையாக, உதவிபெறும் மேல்நிலை பள்ளிகளிலும், உபரி ஆசிரியர்கள் மற்றும் உபரி ஆசிரியர் பணியிடங்கள் விவரத்தை கணக்கெடுத்து உடன் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு பள்ளிகளில் உபரி ஆசிரியர் விவரம் வெளிப்படையாக தெரிவிக்கப்படும் பட்சத்தில், அரசு உதவிபெறும் பள்ளிகளில் இதன் விவரம் சரியாக தெரிவிக்கப்படுவதில்லை என புகார் உள்ளது. 'மாநில அளவில் இதுபோன்று, 300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் நிலை -1 பணியிடங்கள் இருக்கலாம்,' என்ற சந்தேகம் அடிப்படையில் ,இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எவ்வித தவறும் இல்லாமல் சரியான விவரத்தை அக்.,20க்குள் அளிக்க வேண்டும் என முதன்முறையாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது, என்றார்.