வியாழன் தோறும் பள்ளிகளில் 'டெங்கு' விழிப்புணர்வுக்கு உத்தரவு

வியாழன் தோறும், பள்ளிகளை சுத்தம் செய்து, 'டெங்கு' விழிப்புணர்வு ஏற்படுத்த, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில், டெங்கு காய்ச்சல் பரவும் நிலையில், பள்ளிகளில், டெங்கு தடுப்பு நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது.


பள்ளிக் கல்வி இயக்குனர் இளங்கோவன், நேற்று முன்தினம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:


 பள்ளிகளின் காலை பிரார்த்தனை கூட்டத்தில், டெங்கு காய்ச்சல் தடுப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்
 டெங்கு கொசுக்கள், நன்னீரில் உற்பத்தியாவதால், பள்ளி வளாகங்களில் நீர் தேங்காமல், சுத்தமாக வைத்து இருக்க வேண்டும்
 டெங்கு பரவும் முறை; அதை தடுக்கும் வகையில், பள்ளிகளையும், வீட்டையும் சுத்தமாக வைத்திருக்கும் முறைகளை மாணவர்களுக்கு, ஆசிரியர்கள் தெரிவிக்க வேண்டும்
 உள்ளாட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம், பள்ளி வளாகத்தை சுத்தம் செய்ய வேண்டும். வியாழன் தோறும், பள்ளி மற்றும் வீடுகள் உள்ள பகுதிகளை சுத்தப்படுத்த வேண்டும்; அத்துடன், உறுதிமொழியும் ஏற்க வேண்டும்
 நாட்டு நலப்பணி திட்டமான, என்.எஸ்.எஸ்., - தேசிய மாணவர் படையான, என்.சி.சி., - இளம் செஞ்சிலுவை சங்கம், பசுமைப்படை, சாரண, சாரணியர் இயக்கம் ஆகியவற்றின் மூலம், பெற்றோருக்கும், மாணவர்களுக்கும், டெங்கு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்வது அவசியம்
 மாணவர்கள் காய்ச்சலுடன் பள்ளிக்கு வந்தால், பெற்றோர் அல்லது பாதுகாவலருக்கு தெரிவித்து, அருகிலுள்ள, அரசு சுகாதார மையத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும். இந்த உத்தரவுகளை, தலைமை மற்றும் ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது