நுழைவு தேர்வு பயிற்சிக்கு 'தொடுவானம்' திட்டம்

தமிழகம் முழுவதும், நான்கு லட்சம் மாணவர்களுக்கு, நுழைவுத் தேர்வு பயிற்சி அளிக்கும் சிறப்பு திட்டம், இரு வாரங்களில் துவங்க உள்ளது. மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வு; ஐ.ஐ.டி., எனப்படும், உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் சேர, ஜே.இ.இ., தேர்வு; மத்திய சட்டக் கல்லுாரிகளில் சேர, 'கிளாட்' தேர்வு என, பல வகை நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.


இத்தேர்வுகளில், வட மாநில மற்றும் ஆந்திர மாணவர்களுக்கு ஈடாக, தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற, பள்ளிக்கல்வித் துறை, சிறப்பு பயிற்சிகளை வழங்க உள்ளது. பயிற்சி திட்டத்திற்கு, 1௦ மாநிலங்களைச் சேர்ந்த நிபுணர்களை, முதன்மை பயிற்சியாளர்களாக நியமிக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள், தமிழகம் முழுவதும், 3,600 ஆசிரியர்களுக்கு, பயிற்சி வகுப்புகள் நடத்த உள்ளனர். இதையடுத்து, அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில், நடப்பாண்டில், பிளஸ் 2 படிக்கும் நான்கு லட்சம் மாணவர்களுக்கு, 452 மையங்களில், நுழைவுத் தேர்வு பயிற்சி வழங்கப்பட உள்ளது. இந்த பயிற்சி திட்டத்திற்கு, 'தொடுவானம்' என, பெயரிடப்பட்டு உள்ளது. இரு வாரங்களில், இது முறைப்படி அறிவிக்கப்படும் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.