850 அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் இல்லை 60 டி.இ.ஓ.,க்கள் இடமும் காலி

''60 மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) மற்றும் 850 அரசு உயர்நிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளதால் கல்விப் பணி பாதித்துள்ளது,'' என தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் கழகம் குற்றம்சாட்டியுள்ளது.




மாநில தலைவர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:மாநில அளவில் 125 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்களில், 60 இடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன. பதவி உயர்வு பட்டியலில் உள்ள 39 தலைமை ஆசிரியர்களுக்கு டி.இ.ஓ., க்களுக்கான பயிற்சி அளிக்கப்பட்டும், பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இதனால் நலத் திட்டங்கள் வழங்குவது, பள்ளிகள் ஆய்வு, கற்றல் கற்பித்தல் மேற்பார்வை, உதவிபெறும் பள்ளிகளுக்கு சம்பளம் வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மொத்தம் உள்ள 2800 அரசு உயர்நிலை பள்ளிகளில், 850க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இரண்டு ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை. இந்த பதவி உயர்வு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜூலையில் முடிவுக்கு வந்தது. ஆனால், அதுதொடர்பான வழக்கு மதுரை நீதிமன்ற கிளையிலும் உள்ளது. சென்னை உத்தரவை மதுரை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர இயக்குனர், செயலர் என யாரும் மூன்று மாதங்களாக அக்கறை செலுத்தவில்லை. இதனால் தலைமை ஆசிரியர் பணியிடங்களையும் நிரப்ப முடியவில்லை.

ஆங்கில வழிக் கல்வி தொடர்பான அரசின் கொள்கை முடிவு தலைமை ஆசிரியர்களுக்கு சரிவர தெரிவிக்கப்படவில்லை. புதிய பாடத் திட்டங்கள் உருவாக்கும் பணியில் பாடங்கள் வாரியாக நியமிக்கப்பட்ட ஆசிரியர் குழு பட்டியல் விபரத்தை வெளியிட வேண்டும். இக்குழுவில் தகுதி, திறமை, அனுபவமில்லாத ஆசிரியர் சிலர் இடம் பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் கல்வி அதிகாரிகள் செயல்பாடு வெளிப்படையாக இருக்க வேண்டும். காலாண்டு தேர்வு முடிந்த நிலையிலும் நிரப்பப்படாத முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் முழுவதையும், வெளிப்படையாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு கூறினார்.பொதுச் செயலர் நடராஜன் உடன் இருந்தார்.