JACTTO-GEO : ஆசிரியர்களுக்கு 2 நாள் சம்பளம் பிடித்தம் செய்ய உத்தரவு

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
இதில் 7 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றுள்ளனர். அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு மதுரை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதனால் உயர் நீதிமன்ற உத்தரவை மதிக்கும் வகையில் அரசு ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என்று தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் சுற்றறிக்கை வெளியிட்டார்.
ஆனாலும், கோர்ட் தடையை மீறி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து 7, 8ம் தேதிகளில்  வேலைக்கு வராத அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் யார், யார் என்று அலுவலகம் வாரியாக கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது. இதுதவிர அன்றைய தினங்களில் பள்ளிக்கு வராத ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்து அதற்கான அறிக்கையை அந்தந்த மாவட்ட கல்வி அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஸ்டிரைக்கில் பங்கேற்கும் ஆசிரியர் மீது அரசு பணியாளர் நன்னடத்தை விதிப்படி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கல்வித்துறையின் இந்த நடவடிக்கை, ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.