போராட்டம்:
பழைய பென்சன், 7 வது சம்பள கமிஷன் பரிந்துரை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்திற்கு மதுரை ஐகோர்ட் கிளை தடை விதித்திருந்தது. ஆனால், தடையை மீறி அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனையடுத்து அவர்கள் மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஆஜராகினர்.
அப்போது, பல்வேறு முறைகளில் கோரிக்கைகளை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை என்பதால் போராட்டம் நடத்துவதாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் கூறினர்.
பேச்சுவார்த்தை:
இதன் பின்னர் ஐகோர்ட் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தங்களது வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும். கோர்ட்டையும், கோர்ட் ஊழியர்களையும் அவமதிக்கும் வகையில் தடையை மீறி போராட்டம் நடக்கிறது. போராட்டத்தை கைவிட்டால், தலைமை செயலரை நேரில் வரவழைத்து பேச்சவார்த்தை நடத்த தயாராக இருக்கிறோம். இது குறித்த முடிவை சிறிது நேரத்தில் அறிவிக்க வேண்டும் எனக்கூறி வழக்கை சிறிது நேரத்திற்கு ஒத்திவைத்தனர்.