தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆசிரியர் தின வாழ்த்து நல்லாசிரியர் விருது பெறுபவர்களுக்கு பாராட்டு

தமிழ்நாடு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ஆசிரியர் தின வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

மாணாக்கர்களின் அறிவுக் கண்ணை திறக்கும் ஆசிரியராகத் தன்னுடைய வாழ்வைத் தொடங்கி, இந்திய நாட்டின் ஜனாதிபதியாக உயர்ந்து, தாம் ஏற்ற பொறுப்புகளை திறம்பட வகித்து, ஆசிரியர் சமுதாயத்திற்கு பெரும் சிறப்பினை சேர்த்த
டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணனின் பிறந்த தினமான செப்டம்பர் 5-ந் தேதியை (இன்று) ஆசிரியர் தினமாக கொண்டாடும் அனைவருக்கும் எனது இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த ஆசிரியர் தின நன்னாளில், நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஆசிரியப் பெருமக்கள் அனைவரும் நல்ல குறிக்கோள்களையும், சமுதாய உணர்வுகளையும் மாணவச் செல்வங்களுக்கு விதைத்து சிறந்த கல்விப் பணியாற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.