கிராமங்களுக்கு இணையதள வசதி!!!

நாட்டில் உள்ள 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளில் சுமார் 31,680 பஞ்சாயத்துகளுக்கு மத்திய அரசு இணையதள சேவை வழங்கியுள்ளதாக மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா கடந்த புதன்கிழமை (ஆகஸ்ட் 30) அறிவித்துள்ளார்.

2019 மார்ச் இறுதிக்குள் நாட்டின் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகளையும் அதிவேக பிராட்பேண்ட் மூலம் இணைப்பதே பாரத் நெட் திட்டத்தின் இலக்காக உள்ளது.

இதுகுறித்து அவர், “பாரத் நெட் திட்டத்தின்கீழ் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வரை 31,680 கிராம பஞ்சாயத்துகளுக்கு இணையதள சேவை வழங்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

2017 ஜூலை நிலவரப்படி, 1 லட்சத்துக்கு 299 கிராம பஞ்சாயத்துகளை இணைக்க 2,21,925 கி.மீ. தொலைவுக்கு ஆப்டிகல் ஃபைபர் கேபிள் பதிக்கப்பட்டுள்ளது. இதில் 25,426 கிராம பஞ்சாயத்துகளுக்கு பிராட்பேண்ட் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக நேஷனல் ஆப்டிகல் ஃபைபர் நெட்வொர்க் கடந்த 2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அங்கீகரிக்கப்பட்டது.

தமிழகக் கிராமங்களுக்கு ரூ.3,000 கோடி செலவில் இணையதள வசதி அளிக்கும் பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தார் என்பது நினைவுகூரத்தக்கது.