அசல் ஓட்டுனர் உரிமம் விவகாரம்: 9-ந்தேதி முதல் கடும் நடவடிக்கை பாயும்

தமிழகத்தில் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுனர் உரிமங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. இந்த உத்தரவு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டது. 6 வகையான போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் அசல் ஓட்டுனர் உரிமங்களை போக்குவரத்து போலீசார் கேட்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.


நேற்று போக்குவரத்து போலீசார் வழக்கமாக போக்குவரத்து விதிகளை மீறுபவர்களை மடக்கி சோதனையிட்டனர். ஆனால் அசல் ஓட்டுனர் உரிமங்களை கேட்டு வாகன ஓட்டிகளுக்கு பெரிய அளவில் நெருக்கடி கொடுக்கவில்லை.

நேற்று மாலை இதுதொடர்பாக போக்குவரத்து உயர் போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, “3 நாட்கள் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. வருகிற 9-ந்தேதி முதல் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், போதையில் வாகனம் ஓட்டுதல், செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டுதல், சிக்னலை மதிக்காமல் செல்லுதல், அதிக பாரம் ஏற்றிச்செல்லுதல், சரக்கு வாகனத்தில் பயணிகளை ஏற்றி செல்லுதல் போன்ற 6 வகையான போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களிடம் அசல் ஓட்டுனர் உரிமத்தை கேட்டு போக்குவரத்து போலீசார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள்”, என்று தெரிவித்தனர்.