அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கும் உத்தரவை அமல்படுத்த செப்டம்பர்-5 வரை தடை : உயர் நீதிமன்றம்

சென்னை: தமிழகம் முழுவதும் வாகன ஓட்டிகள் வாகனத்தினை இயக்கும் பொழுது, அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற அரசு உத்தரவை அமல்படுத்த, வரும் செப்டம்பர் 5 வரை தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொது நல வழக்கு ஒன்றில் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், இன்று முதல் தமிழகம் முழுவதும் வாகன ஓட்டிகள் வாகனத்தினை இயக்கும் பொழுது அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
இதனை எதிர்த்து தமிழக டிப்பர் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் சுகுமாரன் என்பவர் சென்னை உயர் நீதின்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இன்று நீதிபதி துரைசாமி முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது தமிழக அரசு சார்பில் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகினர்.
அப்பொழுது அவர் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவானது தனி நபர் தொடர்புடைய ஒன்றாகும். எனவே இதனை எதிர்த்து தமிழக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வழக்கு தொடர முகாந்தரமில்லை என்று தெரிவித்தார்.
அப்பொழுது நீதிபதி துரைசாமி, வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தினை கையில் வைத்து இருக்கும் பொழுது மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்படும் என்றும், அவ்வாறு ஏதேனும் இழப்பு உண்டானால் யார் பொறுப்பு என்றும் கேள்வி எழுப்பினார்
அதற்கு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி வரை வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தினை கையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்தார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வாகன ஓட்டிகள் வாகனத்தினை இயக்கும் பொழுது, அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற அரசு உத்தரவை அமல்படுத்த, வரும் செப்டம்பர் 5 வரை தடை விதித்து உத்தரவிட்டார்.
அத்துடன் இதே விவகாரம் தொடர்பாக டிராபிக் ராமசாமி உள்ளிட்ட இருவர் தொடர்ந்திருக்கும் பொதுநல வழக்கானது, தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்படுவதாகவும் அறிவித்தார்.