தமிழில் டி.சி., : தேர்வுத்துறை அறிவுரை

எட்டாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையில், மாற்று சான்றிதழ்களில், தமிழில் பெயர் பதித்து வழங்குமாறு, பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, அவர்களின் மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழில், ஆங்கிலத்திலேயே பெயர் விபரங்கள் குறிப்பிடப்பட்டு வந்தன. நடப்பாண்டு முதல், மாணவர்களின் பெயர், பள்ளி போன்ற விபரங்கள், மதிப்பெண் சான்றிதழில், ஆங்கிலத்துடன், தமிழிலும் இடம் பெறுகின்றன.

இந்நிலையில், மாற்று சான்றிதழ்களில் ஆங்கிலமே இடம் பெற்றதால், மதிப்பெண் சான்றிதழையும், மாற்று சான்றிதழ் விபரங்களையும் ஒப்பிட முடியாமல் சிக்கல் ஏற்பட்டது.இதையடுத்து, 8ம் வகுப்பு - பிளஸ் 2 வரையில் படித்து முடிக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் பெயர், 'இனிஷியல்' போன்ற விபரங்களை, தமிழிலும் பதிந்து, மாற்று சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு, அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி, இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளார்.