தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளராக கடந்த 8 ஆண்டுகளாக இருந்து வந்த
சபீதாவுக்கு, அமைச்சர்கள், அதிகாரிகள், ஆசிரியர்கள் மட்டத்தில் பலத்த
எதிர்ப்பு இருந்து வந்தது. இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் புதிய
அமைச்சரவை அமைந்தபோது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன்
நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றுக் கொண்டதும், பல்வேறு மாற்றங்களை
கொண்டு வந்தார். முதலாவதாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதாவை
அங்கிருந்து மாற்றினார். அவருக்கு பதிலாக ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன்
பள்ளிக் கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார்.
இது குறித்து பொதுப் பள்ளிக்கான மாநில மேடையின் செயலாளர் பிரின்ஸ்
கஜேந்திரபாபு நேற்று வெளியிட்ட அறிக்கை: பள்ளிக் கல்வித்துறையின் செயலாளராக
உதயசந்திரன் பொறுப்பேற்ற பிறகு அரசுப் பள்ளிகளில் கல்வி கற்றலின் சூழலை
மேம்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மிக முக்கியமாக
தமிழ்நாடு மாநில கல்வித்திட்டம்(Curriculum), பாடத்திட்டம்
(Syllabus)பாடநூல் (Text Book) ஆகியவை தயாரிக்கும் பணி அசுர வேகத்தில்
நடக்கிறது. 21ம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்களாக
மாணவர்கள் உருவாக மாநில பாடத்திட்டததை மேம்படுத்த பணிகள் தீவிரமாக
நடக்கிறது. இந்த நிலையில் இந்த பணிகள் மாணவர்களை அரசுப் பள்ளிகளை நோக்கி
ஈர்க்கும். தனியார் கல்வி நிறுவனங்களுக்கு இது பெரும் பாதிப்பை
ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் வணிக நோக்கில் செயல்படும் சில பள்ளி
நிர்வாகங்களும், சுயநலக் கூட்டமும் ஒரு சிறந்த அதிகாரியை அந்த பணியில்
இருந்து மாற்றத் துடிக்கின்றன. அவர்கள் தூண்டுதலின் பேரில் தமிழக அரசு உதய
சந்திரனை பணி மாற்றம் செய்தால் அது தமிழக அரசின் பாடத்திட்ட மேம்பாட்டு
நடவடிக்கையை சீர்குலைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.