முதல்வர் பழனிசாமி பங்கேற்ற விழாவில், அரசு ஊழியர்கள் திடீரென முழக்கமிட்டதால் சலசலப்பு ஏற்பட்டதோடு, மேடையிலிருந்து முதல்வர்
வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழக அரசு சார்பில் மாவட்டம் முழுவதும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டுவருகிறது. முதல்வர் பழனிசாமி தலைமையில் இந்த விழா நடைபெற்றுவருகிறது. தமிழக வருவாய்த்துறை சார்பில், சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களும் அதிகாரிகளும், ஊழியர்களும் பங்கேற்றனர்.
விழாவில், முதல்வர் பழனிசாமி பேசிக்கொண்டிருந்தார். அப்போது, விழாவில் பங்கேற்றிருந்த கிராம உதவியாளர்கள், திடீரென ஊதிய உயர்வு வழங்கக்கோரி முழக்கம் எழுப்பினர்.
அதைப் பார்த்து முதல்வர் பழனிசாமி அதிர்ச்சியடைந்தார். உடனடியாக, அமைச்சர் உதயகுமார் எழுந்து, அமைதி காக்குமாறு கிராம உதவியாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். தொடர்ந்து கிராம உதவியாளர்கள் முழக்கமிட்டதால், முதல்வர் பழனிசாமி விழா மேடையிலிருந்து புறப்பட்டுச்சென்றார். மேலும், விழா நிறைவடைவதற்கு முன்னதாகவே கிராம உதவியாளர்கள் சிலர் பாதியில் வெளியேறினர்.
முதல்வர் பழனிசாமி விழாவில் கிராம உதவியாளர்கள் முழக்கமிட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.