தமிழகம் முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட
ஆசிரியர்களின் விவரங்களை சேகரித்து சமர்ப்பிக்க வேண்டும் என்று தொடக்கக்
கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாவட்ட தொடக்கக் கல்வி
அலுவலர்களுக்கு தொடக்க கல்வித்துறை இயக்குநர் பிறப்பித்துள்ள உத்தரவில்
கூறியிருப்பதாவது:
தொடக்க கல்வித்துறையில் ஆசிரியர்கள் மீது கடந்த 5 ஆண்டுகளில் பணியில்
காணப்பட்ட குறைபாடுகள் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை விவரங்களை
சேகரிக்கவேண்டும். தொகுப்பு அறிக்கை தயாரிக்கும்போது தமிழ்நாடு
குடிமுறைப்பணி (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளில் விதி 17, 17அ,
17ஆ, 17இ-யின் கீழ் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட விவரங்களும்
பணியில் ஒழுங்கீனம் காரணமாக ஊதியம் பிடித்தம் செய்யப்பட்ட ஆசிரியர்களின்
விவரங்களும் சேகரிக்க வேண்டும்.
எவ்வித விவரங்களும் விடுபடாமல், தனித்தனியாக மாவட்ட அளவில் தொகுத்து
2012-2013 முதல் 2016-2017ம் ஆண்டுகளின் விவரங்களை சேகரித்து மாவட்ட
தொடக்கக் கல்வி அலுவலர்கள் சமர்ப்பிக்கவேண்டும்.இவ்வாறு அதில்
கூறப்பட்டிருந்தது.இந்த அறிக்கை எவ்வளவு நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும்,
இதன்மூலம் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து எந்த தகவலும்
தெரிவிக்கப்படவில்லை.