பாடத்திட்டம் உருவாக்க செப்., 5ல் கருத்தாய்வு

பாடத்திட்டத்தை உருவாக்கும் கலைத்திட்டக் குழுவின், கருத்தாய்வுக் கூட்டம், செப்., 5ல், சென்னையில் நடக்கிறது.தமிழகத்தில், 14 ஆண்டுகளாக மாற்றப்படாத, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம் மற்றும் ஆறு ஆண்டுகள் பழமையான, ஒன்றாம் வகுப்பு முதல்,
10ம் வகுப்பு வரையிலான பாடத்திட்டங்கள், விரைவில் மாற்றப்பட உள்ளன. இதற்காக, தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், கலைத்திட்ட வடிவமைப்பு குழு மற்றும் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு உள்ளது.அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர்,அனந்தகிருஷ்ணன் தலைமையிலான இந்த குழுவினர், பொதுமக்களின் கருத்துக் கேட்பு கூட்டம், கல்வியாளர்களின் பாடத்திட்ட பங்களிப்பு கூட்டம், கருத்தரங்கம், பெற்றோர், ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்பு போன்ற நிகழ்வுகளை, நடத்தி வருகின்றனர்.இது குறித்து, பல மாவட்டங்களில் கருத்துக் கேட்புக் கூட்டம் நடந்துள்ளது.அடுத்தகட்டமாக, கருத்தாய்வு கூட்டம், செப்., 5ல், சென்னையில் நடக்கிறது. இதில், கலைத்திட்ட உறுப்பினர்கள் பங்கேற்று, கருத்துக்களை ஆய்வு செய்து, அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவு செய்ய உள்ளனர்.