சிறப்பாசிரியர் TET தேர்வு: இளம் பட்டதாரிகளுக்கு சிக்கல்

தொழில் ஆசிரியர் சான்றிதழ் படிப்பை, 10 ஆண்டுகளாக நடத்தாததால், அரசின் சிறப்பாசிரியர்களுக்கான போட்டி தேர்வில், இளம் பட்டதாரிகள்
பங்கேற்க முடியாத நிலை உருவாகிஉள்ளது.
 தமிழக அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை மற்றும் உடற்கல்வி என, நான்கு படிப்புகளில், சிறப்பு பாட ஆசிரியர்களாக, 2,500 பேர் பணிபுரிகின்றனர். மேலும், 5,166 இடங்கள் காலியாக உள்ளன. இதில், 1,188 இடங்களை நிரப்ப, ஆகஸ்ட், 19ல், போட்டித் தேர்வு நடக்க உள்ளது.
தேர்வுக்கான பாடத்திட்டத்தை, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. இதில் உள்ள நிபந்தனைகளால், சிறப்பாசிரியர் தேர்வை, இளம் பட்டதாரிகள் எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு கலை ஆசிரியர் நலசங்கத்தின் மாநில தலைவர், எஸ்..ராஜ்குமார் கூறியதாவது:அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 5,000 கலை ஆசிரியர் பணியிடங்களை, விரைந்து நிரப்ப வேண்டும். சிறப்பாசிரியர் பணிக்கு போட்டி தேர்வு நடத்துவது வரவேற்கத்தக்கது.
ஆனால், போட்டி தேர்வு எழுதுவதற்கு தேவையான தகுதியான, தொழில் ஆசிரியர் சான்றிதழ் படிப்பு, 2007 முதல் நடத்தப்படவில்லை.எனவே, இளம் தலைமுறை மாணவர்கள், தொழில் ஆசிரியர் சான்றிதழ் படிப்பை முடிக்காததால், போட்டி தேர்வில் பங்கேற்று, அரசு பணியில் சேர முடியாத சூழல் உள்ளது. தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, இளம் தலைமுறை பட்டதாரிகள், சிறப்பாசிரியர்களாக அதிகம் இடம் பெற்றால், கற்பித்தலிலும், தரத்திலும் மாற்றம் வரும். எனவே, தொழில் ஆசிரியர் சான்றிதழ் படிப்பை, தாமதமின்றி நடத்த வேண்டும்.இவ்வாறு அவர்

கூறினார்.