பள்ளிகளில் தொடரும் கள ஆய்வு: பிளஸ் 1 வகுப்புக்கு விரைவில் மாதிரி வினாத்தாள்

பிளஸ் 1 வகுப்புக்கு புதிய வினாத்தாள் வடிவமைப்பதற்காக பள்ளி
மாணவர்களிடம் கள ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையடுத்து இந்தப் பணி அடுத்த சில நாள்களுக்குள் முடிக்கப்பட்டு வினாத்தாள் தொடர்பான அரசாணை வெளியிடப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிளஸ் 1 வகுப்புக்கு நிகழ் கல்வியாண்டு (2017}18) முதல் மொத்தம் 600 மதிப்பெண்கள் அடிப்படையில் அரசு பொதுத்தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு 10}ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ்}2 என மூன்று பொதுத் தேர்வுகளை மாணவர்கள் சந்திக்க உள்ளனர். இதைத் தொடர்ந்து பிளஸ் 1 வகுப்புக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் மாதிரி வினாத்தாள் தயாரிக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.
ஆசிரியர்கள் வலியுறுத்தல்: இந்தநிலையில் பிளஸ் 1 அரசு பொதுத் தேர்வுக்கான புதிய மாதிரி வினாத் தாள்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.
இது குறித்து தமிழ்நாடு முதுநிலைப்பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் கே.பி..சுரேஷ் கூறியது: பிளஸ் 1 பொதுத்தேர்வு கடந்த மே மாத இறுதியில் அறிவிக்கப்பட்டது.
புதிய வினாத்தாளில் எத்தனை ஒரு மதிப்பெண், 3 மதிப்பெண், 8 மதிப்பெண் வினாக்கள் கேட்கப்படும், அவை எந்தெந்த பாடங்களிலிருந்து கேட்கப்படும் என்பதை அறிய மாதிரி வினாத்தாள், ப்ளு பிரிண்ட் ஆகியவை உதவிகரமாக இருக்கும்.
பருவத் தேர்வுகளுக்கும், பாடங்களை முடிப்பதற்கும் ஆசிரியர்களுக்கு குறைந்த காலமே இருப்பதால் ப்ளு பிரிண்டுடன் கூடிய வினாத்தாளை வெளியிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
பள்ளிகளில் கள ஆய்வு: இது குறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் .அறிவொளி கூறுகையில், இயற்பியல், வேதியியல், கணிதம், பொருளியல், வணிகவியல் உள்ளிட்ட 23 முக்கிய பாடங்களுக்கும், தொழிற்கல்வி சார்ந்த 11 பாடங்களுக்கும் மாதிரி வினாத்தாள் வடிவமைக்கப்பட்டு வருகிறது. தற்போது 20 பாடங்களுக்கான வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பல்வேறு பள்ளிகளில் மாணவர்களிடம் வினாத்தாள் அளிக்கப்பட்டு அவர்களைத் தேர்வு தேர்வு எழுதச் செய்து அதன் பின்னர் கருத்துக் கேட்கப்படும். இந்தக் கள ஆய்வு கடந்த சில நாள்களாக தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.
முழு மதிப்பெண் சற்று கடினம்: இதைத் தொடர்ந்து புதிய வினாத்தாளின் தன்மை குறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் கூறும் குறைகள் உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்பட்டு வினாத்தாள்கள் முழுமையாக வடிவம் பெறும். தேசிய அளவிலான போட்டித்தேர்வுகளை தமிழக மாணவர்கள் திறம்பட எதிர்கொள்ள வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால் மாணவர்கள் எளிதில் 100 மதிப்பெண் பெற முடியாத அளவுக்கு வினாத்தாள் சற்று கடினமாக இருக்கும்.

பிளஸ் 1 புதிய வினாத்தாள் குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள் எந்தக் குழப்பமும் அடைய வேண்டாம். ஒரு வாரத்துக்குள் இந்தப் பணி முடிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்படும். மேலும் மாதிரி " வினாத்தாள் ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும். இதைப் பார்த்து கேள்விகள் எந்த முறையில் கேட்கப்படும் என்பதை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்" என்றார்