இன்ஜினியரிங் கவுன்சிலிங் நாளை துவக்கம் 1.67 லட்சம் இடங்களுக்கு ஒதுக்கீடு

அண்ணா பல்கலை இணைப்பிலுள்ள, ௫௮௩ இன்ஜினியரிங் கல்லுாரிகளில், ௧.௬௭ லட்சம் இடங்களை நிரப்புவதற்கான கவுன்சிலிங், நாளை துவங்குகிறது. இதற்கான, அழைப்பு கடிதம் மற்றும், 'கட் ஆப்' மதிப்பெண் விபரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.


பி.இ., - பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை, தமிழக அரசு சார்பில், அண்ணா பல்கலையில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், ஜூன் மூன்றாம் வாரத்தில், கவுன்சிலிங் துவங்கும். இந்த ஆண்டு, 'நீட்' தேர்வு குறித்த வழக்குகளால், மருத்துவ கவுன்சிலிங் தள்ளிப்போடப்பட்டுள்ளது.

அதனால், இன்ஜி., கவுன்சிலிங்கும் தாமதமானது. ஆனால், 'நீட்' பிரச்னை இன்னும் முடிவுக்கு வராமல் உள்ளதால், இன்ஜி., கவுன்சிலிங்கிற்கான தேதி அறிவிக்கப்பட்டது.இதன்படி, நாளை முதல் இன்ஜி., கவுன்சிலிங் துவங்குகிறது. இந்த ஆண்டு, ஒரு லட்சத்து, 41 ஆயிரத்து, 77 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், ஒரு லட்சத்து, 39 ஆயிரத்து, 988 பேர், கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.2,083 பேர் தொழிற்கல்வி பாடப்பிரிவில் விண்ணப்பித்துள்ளனர்.

தொழிற்கல்வி மாணவர்களுக்கு, நாளையும், நாளை மறுநாளும், கவுன்சிலிங் நடக்கிறது. இதில், மொத்தம், 6,224 இடங்களுக்கு,2,083 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். தொழிற்கல்வியில், அதிகபட்ச கட் ஆப் மதிப்பெண்ணாக,179 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வரும், 18ம் தேதி, பிற்பகல், 2:00 மணியுடன் தொழிற்கல்வி கவுன்சிலிங் முடிகிறது.

இந்த கவுன்சிலிங் முடியும் போது, 4,500௦ இடங்கள் வரை, காலியாக இருக்கும் என, தெரிகிறது. இந்த காலியிடங்கள், பொது கவுன்சிலிங்கில் சேர்க்கப்படும். மாற்று திறனாளி களுக்கு, ஜூலை, 19; விளையாட்டு பிரிவுக்கு, ஜூலை, 21; பொது பிரிவு மாணவர்களுக்கு, ஜூலை, 23௩ல் கவுன்சிலிங் நடக்கிறது.

கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான அழைப்பு கடிதம் மற்றும் எந்த மாணவர்கள், எந்த நாளில் வர வேண்டும் என்ற பட்டியல், அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இன்ஜி., கமிட்டியின், www.tnea.ac.in என்ற இணையதளத்தில், விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

கடந்த ஆண்டுகளில், மாணவர்களின் மொபைல் போன் மற்றும், 'இ - மெயில்' முகவரிக்கு, அழைப்பு கடிதங்கள் முன்கூட்டியே அனுப்பப்பட்டன. மேலும், கவுன்சிலிங்கின் ஒவ்வொரு நிலையும், மாணவர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டன. இந்த ஆண்டு, அதுபோன்ற தகவல்களை அனுப்புவதில் தாமதம் காணப்படுகிறது.



ஏற்பாடுகள் என்ன... மாணவர்கள் குழப்பம்

இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங், நாளை துவங்கும் நிலையில், அதற்கான வசதிகள் மற்றும் இலவச பஸ் பாஸ் குறித்து, முறையான அறிவிப்புகள் இல்லாததால், மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழக அரசு சார்பில், இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், நாளை துவங்க உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்களுக்கும், அவர்களுடன் வரும் பெற்றோரில் ஒருவருக்கும், சென்னைக்கு வந்து செல்ல, அரசு பஸ்களில், இலவச பஸ் பாஸ் வழங்கப்படும். அதேபோல், மாணவியர் மற்றும் அவருடன் வருவோர் தங்குவதற்கும், அண்ணா பல்கலையில் இட வசதி செய்யப்படும்.

மாணவர்கள், தங்களின் அழைப்பு கடிதத்தை காட்டி, அரசு பஸ்களில், இலவசமாக சென்னை வரை பயணிக்கலாம். கவுன்சிலிங் முடிந்ததும், அதே கடிதத்தை காட்டி, திரும்ப செல்லலாம். இதுகுறித்து, கவுன்சிலிங் கமிட்டி மூலம், போக்குவரத்து துறைக்கு தெரிவித்து, பஸ் டிரைவர் மற்றும் நடத்துனர்களுக்கு, முன்கூட்டியே தகவல் தெரிவித்தால் மட்டுமே, மாணவர்கள் இலவச பயணத்துக்கு அனுமதிக்கப்படுவர்.

ஆனால், இந்த ஆண்டு என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பஸ் பாஸ் பெறுவது எப்படி என்ற விபரங்களை, இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டி, இதுவரை வெளியிடவில்லை. மேலும், கவுன்சிலிங்கில் பங்கேற்பதற்கான வழிகாட்டுதல் விபரங்களையும், இணையதளத்திலோ, ஊடகங்கள் மூலமோ, இன்ஜி., கவுன்சிலிங் கமிட்டி வெளியிடவில்லை.