‘பயோமெட்ரிக் வருகைப்பதிவு, 100 சதவீத தேர்ச்சி... அசத்தும் அரசுப்பள்ளி!

அரசு வேலையில் சேர வேண்டும் என்ற ஆர்வம், குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதில் இருப்பதில்லை. போதுமான கட்டமைப்பு இல்லாதது, கல்வியின் தரம் குறித்த சந்தேகம் உட்பட பல்வேறு
காரணங்களால், அரசுப் பள்ளியில் தங்கள் குழந்தைகளைச் சேர்ப்பதில் பெற்றோருக்குத் தயக்கம். அதேநேரம், தனியார் பள்ளிகளுக்குச் சவால்விடும் வகையில், சிறந்து விளங்கும் அரசுப் பள்ளிகள் அதிகரித்துவருவது மகிழ்ச்சியான செய்திகளில்ஒன்றுதான், திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்படும் கொடுங்கையூர் அரசுப்பள்ளி
 
அந்த பள்ளியில் அப்படியென்ன பெரிய வசதிகள் உள்ளன எனக் கேட்கத் தோன்றுகிறதல்லவா? ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயோமெட்ரிக் வருகைப் பதிவேடு, அனைத்து வகுப்புகளிலும் சிசிடிவி கேமிரா, ஏசி வசதியுடன் ஸ்மார்ட் வகுப்பறை, தோட்டம், மீன்தொட்டி என வியக்கவைக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தப் பள்ளி மாணவர்கள் பத்தாம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சி அடைந்துவருகின்றனர் என்பது கூடுதல் சிறப்பு. பள்ளியைக் குறித்துப் பெருமையுடன் பகிர்ந்துகொள்கிறார், தலைமையாசிரியர் முனிராமையா.
அரசுப் பள்ளி
‘‘இந்தப் பள்ளி 1999-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அப்போது முதலே ஒவ்வொரு வருடமும் வீடு வீடாகச் சென்று மாணவர் சேர்க்கை நடத்துகிறோம். கட்டமைப்பு வசதிகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்திவந்தோம். மாறி வரும் சூழலை புரிந்துகொண்டு ஆசிரியர்கள், பெற்றோர்களுடன் கூட்டங்கள் நடத்துவோம். மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை மேற்கொள்ள ஆசிரியர்கள், கிராமத்தினர் மற்றும் தொண்டு நிறுவனங்கள் மூலம் நன்கொடை பெற்று பள்ளியை மேம்படுத்தினோம். பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் பலர் நல்ல பதவியில் இருக்கிறார்கள். அவர்களைச் சந்தித்து நிதி திரட்டி பள்ளியை மேம்படுத்தினோம். தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் மற்றும் எங்கள் பள்ளி தமிழாசரியர் இளமாறன் பல்வேறு அமைப்புகள் மூலம் எங்களுக்கு பெருமளவில் நிதி திரட்டி உதவி வருகிறார்கள்.
இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்த, மாணவர்கள் பள்ளிக்குள் தோட்டம் அமைக்க உற்சாகப்படுத்தினோம். அங்கே மீன்தொட்டி வைத்துள்ளோம். மாணவர்கள் பள்ளிக்குள் நுழைந்ததும் தோட்டத்துக்குள் இயற்கையையும், மீன்களையும் ரசித்துவிட்டு உள்ளே வருகின்றனர். இதனால், அவர்களிடம் புத்துணர்ச்சியும் பாசிட்டிவ் சிந்தனைகளும் ஏற்படுகிறது. கவனச்சிதறல் குறைந்துள்ளது. காலம் தவறாமை என்பது வளரும் பருவத்திலேயே ஏற்பட வேண்டும். ஆசிரியர்களும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும். அதற்காக, பயோமெட்ரிக வருகைப் பதிவேட்டை கொண்டுவந்தோம். தொடக்கத்தில் தாமதமாக வந்துகொண்டிருந்த ஓரிரு ஆசிரியர்களும், மாணவர்களும் தற்போது சரியான நேரத்துக்கு வருகிறார்கள்’’ என்றவர், கல்வி குறித்த விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

‘‘நவீன சூழலுக்கேற்ப கல்வி கற்பித்தலின் தரமும் அவசியம். எனவே, தொண்டுள்ளம் படைத்தவர்களின் உதவியால், தொடுதிரை வசதிகொண்ட ஏசி ஸ்மார்ட் கிளாஸை உருவாக்கினோம். ஒரு விஷயத்தை விஷுவலாக காட்டும்போது மனதில் எளிதாகப் பதியும். ஸ்மார்ட் கிளாஸ் வந்தபின்னர் மாணவர்கள் ஆர்வமாகக் கற்பதை உணர முடிந்தது.

ஒவ்வொரு வகுப்பறையிலும் சிசிடிவி கேமரா பொருத்தியிருக்கிறோம். இதனால், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே கூடுதல் பொறுப்புணர்வு வந்துள்ளது. ஒழுக்கமுடன் நடந்துகொள்கிறார்கள். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக அக்கறை எடுத்து, சிறப்பு வகுப்பு நடத்துகிறோம். மாணவர்களும் ஆர்வமுடன் கற்றுவருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக, எங்கள் பள்ளி பத்தாம் வகுப்பில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றனர். இதற்காக, அரசின் பரிசுத்தொகையான ஒரு லட்சம் ரூபாயைப் பெற்றுள்ளோம். இது எங்களை மேலும் ஊக்கப்படுத்தி இருப்பதோடு, பள்ளியின் கட்டமைப்பை மேலும் சிறப்பாக்க உதவியாக இருக்கிறது’’ என்றார் முனிராமையா பெருமையுடன்.