தமிழகத்தில் ஜவ்வாக இழுக்கும் வகையில் வெளியிடப்பட்ட பொதுத் தேர்வுகள்
அட்டவணைகளால் மாணவர்களுக்கு சோர்வும், ஆசிரியர்களுக்கு விரக்தியும்
ஏற்படும்,' என கல்வியாளர்கள் கருதுகின்றனர்.
கல்வித்துறை செயலாளராக உதயச்சந்திரன் பொறுப்பேற்றது முதல் மாணவர் நலன்,
அரசு பள்ளிகளை மீட்டெடுக்கும் வகையில் வெளியாகும் புதிய அறிவிப்புகள்
அனைத்து தரப்பினரையும் வரவேற்பதாக உள்ளன.
மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை போக்க, பொதுத் தேர்வுகளில் மாநில ராங்க் பெற்ற
மாணவர் பட்டியலை வெளியிடாதது, சி.பி.எஸ்.இ.,க்கு இணையாக பாடத்திட்டம்,
பிளஸ் 1க்கு பொதுத் தேர்வு, பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு
தேதிகள் முன்கூட்டியே வெளியீடு போன்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள்
எடுக்கப்பட்டுள்ளன.
பத்தாம் வகுப்பு தேர்வு மார்ச் 16ல் துவங்கி ஏப்.,20ல் முடிகிறது. இதன்
முடிவு மே 23ல் வெளியாகும். பிளஸ் 1 தேர்வு மார்ச் 7 ல் துவங்கி ஏப்.,16
முடிகிறது. தேர்வு முடிவு மே 30ல் வெளியாகும். பிளஸ் 2 தேர்வு மார்ச் 1ல்
துவங்கி ஏப்.,6 முடிகிறது. இதன் முடிவு மே 16ல் வெளியாகும் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து பாடங்களே உள்ள, ஏழு தேர்வுகள் உள்ள பத்தாம் வகுப்பு தேர்வு, மார்ச்
16 துவங்கி ஏப்., 20 என 35 நாட்கள் நடக்கின்றன. இதன் அடிப்படையில் ஒரு
தேர்வுக்கு சராசரியாக தலா 5 நாட்கள் இடைவெளி உள்ள வகையில் அட்டவணை
அமைந்துள்ளது.
அதுபோல் பிளஸ் 1 தேர்வு 40 நாட்களும், பிளஸ் 2 தேர்வு 36 நாட்களும்
நடக்கின்றன. இதனால் மாணவர்களுக்கு தேர்வு தொடர்பான 'அதிகபட்ச மன உளைச்சல்'
ஏற்பட
வாய்ப்புள்ளது.
தற்போது அதிக நாட்கள் இடைவெளியில் அமைந்த அட்டவணை, மாணவர்களுக்கு சோர்வை
ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஒரு மாதத்திற்கும் மேல் தேர்வு பீதியில்
மாணவர்கள் காலத்தை தள்ள வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து ஆசிரியர், கல்வியாளர்கள் கூறியதாவது:மூன்று பொதுத்
தேர்வுகளுக்கும் குறைந்தபட்சம் 35 முதல் 40 நாட்கள் இடைவெளியில் நடப்பதாக
உள்ளன.குறிப்பாக, பிளஸ் 2 கணிதம் தேர்வு மார்ச் 12ல் நடக்கிறது. ஆறு
நாட்களுக்கு பின்
இயற்பியல் தேர்வு 19ல் நடக்கிறது. அதை தொடர்ந்து 26ல் வேதியியல். ஏப்.,2ல் உயிரியல் தேர்வுகள் நடக்கின்றன.
இதைவிட பத்தாம் வகுப்பு தேர்வுகளில் அதிக நாட்கள் இடைவெளி காணப்படுகின்றன.
உதாரணமாக, மார்ச் 21ல் தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடந்த பின், 28 ல் தான்
ஆங்கிலம் முதல் தாள் தேர்வு நடக்கிறது. இதை தொடர்ந்து ஏப்.,4 ல் ஆங்கிலம்
2ம் தாளும், 10ல் கணிதம், 17 ல் அறிவியல், 20 ல் சமூக அறிவியல் என அதிக
நாட்கள் இடைவெளி உள்ளன.
இந்த இடைவெளியை குறைக்க வேண்டும். பிளஸ் 2 தேர்வுக்கு இடையே உள்ள விடுமுறை
நாட்களிலேயே, பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளை நடத்தலாம்.
பிளஸ் 2 தேர்வு மார்ச் 1 துவங்கும் நிலையில், பத்தாம் வகுப்பு தேர்வு 16
நாட்களுக்கு பின் துவங்குவது தேவையில்லாதது. ஒவ்வொரு தேர்வுக்கும் தேதிகள்
குறுக்கிடாத வகையில் ஒரு மாதத்திற்குள் மூன்று பொதுத் தேர்வுகளையும் நடத்தி
முடிக்கும் வகையில் கல்வித்துறை திட்டமிட வேண்டும்.
இப்படி தயாரிக்கலாமே
பொதுத் தேர்வுகளை ஜவ்வாக இழுப்பதற்கு பதில், பிளஸ் 2 தேர்வை திங்கள்- தமிழ்
முதல் தாள் தேர்வு, செவ்வாய்- தமிழ் 2ம் தாள், வியாழன்- ஆங்கிலம் முதல்
தாள், வெள்ளி- ஆங்கிலம் 2ம் தாள் என மொழித்தேர்வுகளை நடத்தலாம்.
பின்னர் பிற பாடங்களை, ஒவ்வொரு தேர்வுக்கும் இடையே தலா ஒரு நாள் விடுமுறை விட்டு நடத்தலாம்.
இதுபோல் பத்தாம் வகுப்பிற்கான 5 தேர்வுகளை, திங்கள் துவங்கி ஒரு நாள்
விட்டு ஒரு நாள் என பத்து நாட்களுக்குள் அதாவது ஏப்., 1 முதல் 10க்குள்
தேர்வை முடிக்கும் வகையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட அட்டவணையில் மாற்றம்
செய்யலாம். இம்மாற்றம் மூலம் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஏற்படும்
'தேர்வுச் சுமை'யை தவிர்க்கலாம் என்பது கல்வியாளர்களின் கருத்து.