பொறியியல் படிப்புகளுக்கான ரேண்டம் எண் வெளியீடு

Advertisement
சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர ரேண்டம் எண் இன்று வெளியிடப்பட்டது.
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, 550க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லுாரிகளில், பி.இ., -
பி.டெக்., படிப்பில் சேர, ஒற்றை சாளர கவுன்சிலிங் மூலம், மாணவர் சேர்க்கை நடக்கிறது. இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்க, மே, 1 முதல், 31 வரை விண்ணப்ப பதிவு நடந்தது.
இதில், 1.68 லட்சம் பேர், ஆன்லைனில் பதிவு செய்தனர். அவர்களில், 1.40 லட்சம் பேர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, பல்கலைக்கு அனுப்பி உள்ளனர். இவர்களுக்கான, தரவரிசையை முடிவு செய்வதற்கான, 'ரேண்டம்' எண், இன்று(ஜூன் 20) வெளியிடப்பட்டது. அண்ணா பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் ரேண்டம் எண்ணை, உயர் கல்வி துறை செயலர் சுனில் பாலிவல் வெளியிட்டார்.
ஒவ்வொரு மாணவருக்கும், 'ரேண்டம்' எண் உருவாக்கப்படும். அதை, அண்ணா பல்கலை இணையதளத்தில் மாணவர்கள் பார்க்கலாம். ஒரே மாதிரியாக, 'கட் ஆப்' பெறும் மாணவர்களில், யாருக்கு முன்னுரிமை அளிப்பது என்பது குறித்து, 'ரேண்டம்' எண் மூலம் முடிவு செய்யப்படும்.