60 மதிப்பெண் குறைப்பு விவகாரம் : ஆசிரியர்கள் மீது நடவடிக்கை?

பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியில், 60 மதிப்பெண்களை குறைத்த, ஆசிரியர் மற்றும் அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்ய, தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன், 'வாட்ஸ் ஆப்'பில், பிளஸ் 2 கணித வினாத்தாள் வெளியானது. இந்த பிரச்னை குறித்து, துறை ரீதியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை, இன்னும் முடியவில்லை. ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஓய்வு பெற்றுவிட்டனர். அதேபோல, கடந்த ஆண்டு, சில பள்ளிகளில் மாணவர்களுக்கு, ஆசிரியர்களே விடைகளை எழுதி கொடுத்தது, சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பான நீதிமன்ற வழக்கு, இன்னும் முடிவுக்கு வரவில்லை.



இந்நிலையில், இந்த ஆண்டு, விடைத்தாள் திருத்தத்தில், பெரிய குளறுபடி நடந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த மாணவனின், கணித பதிவியல் விடைத்தாளில், 200 மதிப்பெண்கள் பெற்ற நிலையில், 60 மதிப்பெண்களை கூட்டாமல் விட்டு, 140 என, பதிவு செய்துள்ளனர்.
இதை, நான்கு பேர் ஆய்வு செய்து, கையெழுத்து போட்டுள்ளனர். இது குறித்து, தினமலர்  நாளிதழில், நேற்று செய்தி வெளியான நிலையில், விடைத்தாள் திருத்திய ஆசிரியர், துறை அலுவலர், தலைமை திருத்துனர், விடை திருத்தும் மைய அதிகாரி, மதிப்பெண் ஆய்வு அதிகாரி ஆகியோரிடம் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுஉள்ளது.மாணவனின் அசல் விடைத்தாளை ஆய்வு செய்த பின், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மற்றும் அதிகாரிகளை, 'சஸ்பெண்ட்' செய்ய, தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது.