பிளஸ் 1க்கு 'அட்மிஷன் கவுன்சிலிங்' : பள்ளிக்கல்வியின் அடுத்த அதிரடி

இன்ஜி., - மருத்துவ கல்லுாரிகள் போன்று, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், மதிப்பெண் அடிப்படையில், விரும்பிய பாடப்பிரிவில் சேர, பிளஸ் 1 வகுப்புக்கு, ஒற்றை சாளர கவுன்சிலிங் முறை கொண்டு வரப்படுகிறது.
தமிழக பள்ளிக் கல்வித் துறையில், அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் கூட்டணி, பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது. பொதுத் தேர்வுகளுக்கான, ரேங்கிங் முறை ஒழிப்பு; பிளஸ் 1க்கு கட்டாய தேர்வு; பள்ளி திறக்கும் நாளிலேயே பொதுத் தேர்வு தேதி அறிவிப்பு உள்ளிட்ட, பல மாற்றங்களை அறிவித்துள்ளது.
பாடத்திட்டத்தை மாற்ற புதிய உயர்மட்டக்குழு அமைக்கப்பட உள்ளது. நுழைவு மற்றும் போட்டி தேர்வுகளுக்கு பள்ளிகளில், சிறப்பு பயிற்சி அறிமுகமாகிறது. இந்த வரிசையில், பிளஸ் 1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கையில், கவுன்சிலிங் முறை அமலுக்கு வர உள்ளது; விரைவில் இதற்கான அறிவிப்பு ெவளியாகும்.
பள்ளிக்கல்வி அதிகாரிகள், இத்திட்டம் நடைமுறையில் உள்ள கேரளா சென்று, அது பற்றிய விபரங்களை சேகரித்து வந்துள்ளனர். இதன்படி, வரும் கல்வி ஆண்டில் ஒற்றை சாளர கவுன்சிலிங் முறை, அறிமுகமாகிறது. 10ம் வகுப்பில் மாணவர் பெறும் மதிப்பெண் அடிப்படையில், எந்தெந்த பாடப்பிரிவில் சேர வேண்டும் என்பதற்கு விதிகள் உருவாக்கப்படும்.
இன்ஜி., மற்றும் மருத்துவ கல்லுாரிகள் போன்று, அரசு மற்றும் தனியார் பள்ளிகளின், பிளஸ் 1 இடங்கள் மற்றும் பாடப்பிரிவுகள் பட்டியலிடப்படும். ஆன்லைனில் விண்ணப்பங்கள் பெற்று, மதிப்பெண் அடிப்படையில், பாடப்பிரிவு ஒதுக்கீட்டு பட்டியல் தயாரிக்கப்படும். 
இதில், மாணவர் எந்த பள்ளியில் சேர விரும்புகிறாரோ, அந்த பள்ளியில் மதிப்பெண் அடிப்படையில் சேரலாம். தனியார் பள்ளிகள், 50 சதவீத இடங்களை, நிர்வாக ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்க வழி வகை செய்யப்படும்.இவ்வாறு, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.