நாளை மறுநாள் 'NEET' நுழைவு தேர்வு

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புக்கான, 'நீட்' நுழைவு தேர்வு, நாளை மறுநாள் நடக்கிறது. இதில், தமிழகத்தில், 80 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.'அரசு மற்றும் தனியார் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீட் தேர்வு, இந்த ஆண்டு முதல் கட்டாயமாகி உள்ளது.


இதில், தமிழக அரசு ஒதுக்கீட்டில், மாணவர்களை சேர்க்க, நீட் தேர்விலிருந்து விலக்கு கோரி, சட்டசபையில் மசோதா கொண்டு வரப்பட்டது. அதற்கு, ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கவில்லை.
இந்நிலையில், அறிவித்தபடி நீட் நுழைவு தேர்வு, நாளை மறுநாள், நாடு முழுவதும் நடக்கிறது. 103 நகரங்களில், இதற்கான தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

தமிழகத்தில், சென்னை, திருச்சி, மதுரை, கோவை, சேலம், நாமக்கல், வேலுார் ஆகிய நகரங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தம், 11 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்; அவர்களில், 80 ஆயிரம் பேர், தமிழக மாணவர்கள். தமிழக சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை சேர்ந்த, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், தேர்வுக்கு விண்ணப்பித்து உள்ளனர். 


இவர்களுக்கு, அரசு பள்ளிகளில், சிறப்பு பயிற்சி புத்தகம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், நமது நாளிதழ் சார்பில், நீட் தேர்வு வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டு, நீட் வழிகாட்டி புத்தகங்கள், மாணவர்களுக்கு வழங்கப்பட்டன.