அரசு பள்ளிகளில் ஆங்கிலம் பயிலும் மாணவர்களுக்கு இனிமேல் ‘டியூசன்’ கட்டணம்: தமிழக அரசு முடிவு

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில்
படிக்கும் மாணவர்களிடம் டியூசன் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் அரசு பள்ளிகள் தமிழ் மீடியத்தில் செயல்பட்டு வந்தன. தனியார் பள்ளிகள் ஆங்கில மீடியத்தில் நடத்தப்பட்டு வருவதால் அதற்கு போட்டியாக தமிழக அரசும் கடந்த 2012-13-ம் கல்வி ஆண்டில் ஆங்கில மீடியம் பள்ளிகளை தொடங்கியது.
தற்போது தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் 3,400 ஆங்கில மீடியம் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு 3.32 லட்சம் மாணவர்கள் ஆங்கில வழியில் கல்வி பயின்று வருகிறார்கள்.
தமிழ் மீடியத்துக்கு இலவச கல்வி போல் ஆங்கில மீடியத்துக்கும் கட்டணம் இல்லாமல் இலவச கல்வி அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால் அரசுக்கு அதிக நிதிச்சுமையும், நிதி இழப்பும் ஏற்படுகிறது. ஆங்கில வழி கல்விக்கு கட்டணம் இல்லாமல் இலவசமாக அளிக்க தணிக்கை துறை எதிர்ப்பு தெரிவித்தது.
இதையடுத்து அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களிடம் டியூசன் கட்டணம் வசூலிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
அதன்படி 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களிடம் டியூசன் கட்டணமாக ஆண்டுக்கு ரூ.200 முதல் ரூ.500 வரை வசூலிக்க முடிவு செய்துள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு தமிழ் வழி அல்லாத மற்ற மொழி வழி பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்பிறகு தமிழக பள்ளி கல்வித்துறை தனது நிர்வாகத்தின் கீழ் உள்ள ஆங்கில வழி பள்ளிகளில் கல்வி கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டது.
ஆனால் அது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. தற்போது டியூசன் கட்டணம் வசூலிப்பதை கட்டாயமாக அமுல்படுத்த தீவிர ஆலோசனை நடந்து வருகிறது.

இதன்மூலம் ரூ.10 கோடி வசூலிக்க முடியும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.