பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், 'ப்ளூ பிரின்ட்'
முறைப்படி, வினாத்தாள் தயாரிப்பதை மாற்ற, பள்ளிக்கல்வித் துறை முடிவு
செய்துள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வில், வினாத்தாள்
தயாரிப்பில் மாற்றம் கொண்டு வர, தமிழக அரசு முடிவு செய்துஉள்ளது. இதற்காக,
தேர்வு சீர்திருத்தக் குழு ஆய்வு செய்து அறிக்கை தர, அரசு
உத்தரவிட்டுள்ளது.
தற்போது, வினாத்தாளை பொறுத்தவரை, அறிவுத்திறனை சோதிக்க, 19 சதவீதம்;
பாடத்தை புரிந்து கொள்வதை ஆய்வு செய்ய, 31; படித்ததை பயன்படுத்தும்
முறைக்கு, 23; திறனை ஆய்வு செய்ய, 27 சதவீதம் என, 100 சதவீத கேள்விகள் இடம்
பெறுகின்றன.
அதேபோல், 12 சதவீதம் கடினம், 60 சதவீதம் எளிமை மற்றும், 28 சதவீதம் மிதமான
கேள்விகள் தயாரிக்கப்பட வேண்டும் என்ற விதி பின்பற்றப்படுகிறது. இதன்படி,
'ப்ளூ பிரின்ட்' என்ற வினா வடிவமைப்பு முறை பின்பற்றப்படுகிறது.
இந்த வினா வடிவமைப்பு அட்டவணை, ஒவ்வொரு பாட புத்தகத்திலும் இடம் பெறும்.
அதன்மூலம், ஒவ்வொரு பாடத்திலும், எந்த பிரிவில் எத்தனை மதிப்பெண் கேள்விகளை
படிக்க வேண்டும்; எந்த பாடத்தில், புத்தகத்தின் பின்பக்க கேள்விகள்,
எடுத்துக்காட்டுகள், பயிற்சிகளை படிக்க வேண்டும் என்ற விபரம் அறியலாம்.
பெரும்பாலான பள்ளிகளில், ப்ளூ பிரின்ட் படியே, மாணவர்களை தேர்வுக்கு
தயார்படுத்துகின்றனர். அதனால், பல பாடங்கள் மற்றும் வினாக்களை, மாணவர்கள்
படிக்காமல் விட்டு விடுகின்றனர். இப்படி அரைகுறையாக படிப்போர், 'நீட்'
ஜே.இ.இ., போன்ற நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடிவது இல்லை. எனவே,
ப்ளூ பிரின்ட் முறையை நீக்க, தமிழக அரசுக்கு, அண்ணா பல்கலை பரிந்துரைத்து
உள்ளது. அதன்படி, அடுத்த கல்வி ஆண்டு முதல், ப்ளூ பிரின்ட் படி,
பொதுத்தேர்வு வினாத்தாள் தயாரிக்கப்படாது என, கல்வித்துறை வட்டாரங்கள்
தெரிவித்து உள்ளன.