5 ஆண்டாக முடங்கியுள்ள பள்ளிக்கல்வி இணையதளம்

பள்ளிக்கல்வி இயக்குனரகத்தின், அதிகாரப்பூர்வ இணைய தளம்
முடங்கி, ஐந்து ஆண்டுகளாகியும், இன்னும் உயிர் பெறவில்லை. தற்போதைய கணினி யுகத்தில், இணையதளமே இல்லாமல், கல்வித்துறை செயல்படுகிறது.
 ஆளுமை விருது : அனைத்து மாநிலங்களும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இணைய வழியில் நிர்வாக பணிகளை மேற்கொள்ள, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில், கணினி வழியே, நிர்வாக பணிகளை மேற்கொள்ளும் அரசு துறைகளுக்கு, 'மின்னணு ஆளுமை விருது' வழங்கப்படுகிறது. ஆனால், கணினி பாடத்தை மாணவர்களுக்கு கற்று கொடுக்கும், தமிழக பள்ளிக் கல்வித்துறையோ, இணையதளமே இன்றி தள்ளாடுகிறது.
பள்ளி கல்விக்காக, தனியாக இணையதளம் துவங்க, தமிழக அரசு, 2009ல், அரசாணை பிறப்பித்தது. பெற்றோர் ஆசிரியர் கழக நிதியில், www.pallikkalvi.in என்ற இணையதளத்தை, மார்க் மேக்லின் சொல்யூஷன்ஸ் என்ற நிறுவனம் வடிவமைத்தது.
பதிவேற்றப்பட்டன : இதில், பள்ளிக்கல்வியின் அனைத்து அடிப்படை தகவல்கள், சுற்றறிக்கைகள், தினசரி அறிவிப்புகள், மாணவர்களுக்கான அறிவுரைகள் மற்றும் அரசாணைகள் உள்ளிட்ட அனைத்தும் பதிவேற்றப்பட்டன. ஆனால், 2012 ஜன., 19ல், தனியார் நிறுவனத்துடனான, பராமரிப்புக்கான ஒப்பந்தம் முடிந்ததால், இணையதள செயல்பாடு முடங்கியது.

ஐந்து ஆண்டுகளாகியும், இதுவரை புதுப்பிக்கப்படவில்லை. இதுபற்றி, பள்ளிக் கல்வி செயலகமோ, இயக்குனரகமோ கவலைப்படவில்லை. பள்ளிக் கல்வியில் தற்போது, பல்வேறு சீரமைப்பு பணிகள் நடப்பதால், இணையதளம் மீண்டும் உயிர் பெறுமா என, ஆசிரியர்களும், மாணவர்களும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.