பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை முதல் தற்காலிக சான்றிதழ் வழங்கப்படுகிறது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின. தற்காலிக மதிப்பெண்
சான்றிதழ், நாளை வெளியாகிறது. www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், நாளை
முதல், மாணவர்களே பதிவிறக்கம் செய்யலாம்.
வரும், 17 முதல், மாணவர்களுக்கு, பள்ளியிலும்; தனித் தேர்வர்களுக்கு,
தேர்வு மையத்திலும், தற்காலிக சான்றிதழ் வழங்கப்படும். இந்த ஆண்டு,
மதிப்பெண் சான்றிதழில் ஆங்கிலத்துடன், தமிழிலும் மாணவர் பெயர் இடம் பெறும்.
தேர்வை சரியாக எழுதியும், மதிப்பெண் முழுமையாக கிடைக்கவில்லை என, சந்தேகம்
ஏற்பட்டால், மாணவர்கள் மறுகூட்டலுக்கும், மறுமதிப்பீடுக்கும்
விண்ணப்பிக்கலாம். மறுகூட்டல் மட்டும் என்றால், மறுகூட்டலுக்கு மட்டும்
விண்ணப்பிக்க வேண்டும். மறுமதிப்பீடும் தேவை என்றால், விடைத்தாள் நகலை
முதலில் பெற வேண்டும்; அதை ஆய்வு செய்த பின், மறுகூட்டலா, மறுமதிப்பீடா
என்பதை முடிவு செய்யலாம்.
இதற்கான விண்ணப்ப பதிவு, நேற்று முன்தினம் துவங்கியது; நாளை முடிகிறது.
மாணவர்கள், பள்ளியிலும், தனித்தேர்வர்கள், தேர்வு மையத்திலும், அதற்குரிய
கட்டணம் செலுத்தி, விண்ணப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.