பிளஸ் 2 விடைத்தாளில் 'டவுட்' : 'டம்மி' தேர்வு நடத்தி விசாரணை

பிளஸ் 2 தேர்வு விடைத்தாளில், கையெழுத்து மாறுபட்ட
மாணவர்களிடம், அரசு தேர்வுத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, 'டம்மி' தேர்வு நடத்தினர். முந்தைய ஆண்டுகளில், பிளஸ் 2 தேர்வில், பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இரு ஆண்டுகளுக்கு முன், தேர்வு நாளில், 'வாட்ஸ் ஆப்'பில், கணித வினாத்தாள் வெளியானது.
௨௦௧௬ல், தனியார் பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு, ஆசிரியர்களே தேர்வை எழுதி கொடுத்தது தெரிய வந்தது. இதனால், இந்தாண்டு, பிளஸ் 2 தேர்வை, எந்த முறைகேடுக்கும் இடமின்றி நடத்தி, முடிவை வெளியிட, அரசு உத்தரவிட்டு உள்ளது. சந்தேகத்திற்கு இடமான முறையில், விடைத்தாள் தெரிந்தால், அதை ஆய்வுக்கு அனுப்புமாறு, ஆசிரியர்களுக்கு, தேர்வுத் துறை அதிகாரிகள் உத்தரவிட்டிருந்தனர். அதன்படி, 500க்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் தேர்வுத் துறைக்கு வந்தன. அவற்றை, தேர்வுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மாணவர்களையும், பெற்றோரையும் வரவழைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில், கையெழுத்து மாறுபாடு, பேனாவை மாற்றி எழுதியதால் எழுத்துக்களின் நிறம் மாற்றம், எழுத்துக்களின் வடிவத்தில் வித்தியாசம், விடைத்தாளில் அலங்கரிப்பு, ஒரே கேள்வியை இரண்டு முறை எழுதுவது போன்றவை குறித்து விசாரிக்கப்பட்டு உள்ளன. சில கேள்விகளுக்கு பதில் எழுதுமாறு, மாணவர்களுக்கு தனி அறையில், 'டம்மி' தேர்வு நடத்தப்பட்டு உள்ளது.முடிவில், 'தேர்வை நான் தான் எழுதினேன்; எந்த முறைகேடுக்கும் இடம் அளிக்கவில்லை' என, உறுதிமொழி கடிதம் பெறப்பட்டு உள்ளது. வழக்குகள் மற்றும் சட்ட சிக்கல்களை எதிர்கொள்ள, இந்த உறுதிமொழி கடிதம் பெறப்படுவதாக, அதிகாரிகள் கூறினர்.