10ம் வகுப்பு தேர்வில் 'ரேங்க்' அறிவிக்க தடை

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு, நாளை மறுநாள் வெளியாகும் நிலையில், 'ரேங்க் அறிவிக்க கூடாது' என, பள்ளிகளுக்கு, கல்வித்துறை எச்சரித்துள்ளது. பிளஸ் 2 தேர்வில், பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த, 'ரேங்க்' முறை, இந்த ஆண்டு அதிரடியாக ஒழிக்கப்பட்டது. இதற்காக, பள்ளிக்கல்வி அமைச்சர், செயலர் மற்றும் இயக்குனருக்கு பாராட்டுக்கள் குவிந்துள்ளன. தனியார் பள்ளிகளும், தங்கள் பள்ளிகளின், 'டாப்பர்ஸ்' பட்டியலை வெளியிடவில்லை. 


இந்நிலையில், 10ம் வகுப்பு பொது தேர்வுக்கான முடிவுகளை, பள்ளிக்கல்வித் துறை, நாளை மறுநாள் வெளியிடுகிறது. இதிலும், மாநில, மாவட்ட அளவில், 'ரேங்க்' பட்டியல் முறை கிடையாது என, அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில பள்ளிகள், அதிகபட்ச மதிப்பெண் பெற்ற மாணவர்களை, 'டாப்பர்ஸ்' ஆக அறிவிக்க, முடிவு செய்துள்ளன. இதற்கு, தமிழக பள்ளிக்கல்வித் துறை தடை விதித்துள்ளது. மெட்ரிக் பள்ளி இயக்ககம் அனுப்பிய சுற்றறிக்கையில், 'எந்த தனியார் பள்ளியும், 10ம் வகுப்பில் தேர்ச்சி பெறும், தங்கள் மாணவர்களுக்கு, முதல் மூன்று, 'ரேங்க்' வைத்து, அவர்களின் பட்டியலை பிரபலப்படுத்தக் கூடாது; அரசின் அறிவிப்புக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.