1 முதல் 8ம் வகுப்பு வரை இந்தியை கட்டாய பாடமாக்க முடியாது.. மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

இந்தியை கட்டாய பாடமாக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம்
தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
டெல்லி: நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை இந்தி பாடத்தை கட்டாயமாக்க கோரி தாக்கல் செய்த பொது நல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 8 ஆம் வகுப்பு வரை இந்தியை கட்டாய பாடமாக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் அஸ்வினிகுமார் உபாத்யாயா உச்சநீதிமன்றத்தில் பொது நலமனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில் நீதித்துறையில் இருப்பவர்கள்கூட பெரிய அளவில் மொழிப் பிரச்சனையை சந்திக்கின்றனர், மொழிப் பிரச்சனைக்கான தீர்வு இந்தியை கட்டாய பாடமாக்குவதாகத்தான் இருக்கும் என குறிப்பிட்டிருந்தார். மேலும் சகோதரத்துவம், ஒற்றுமை, தேசிய ஒருமைப்பாடு ஆகியவற்றை ஊக்குவிப்பதற்காக மும்மொழி கொள்கையின் அடிப்படையில் இந்தி மொழியை பள்ளிகளில் அமல்படுத்துத்துமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் தெரிவித்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் இந்தி மொழியை கட்டாயப் பாடமாக்க கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.