'நீட்' நுழைவு தேர்வுக்கு மருத்துவ கவுன்சில் 'சிலபஸ்'

'நீட் நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை, நாங்கள் தயாரிக்கவில்லை; இந்திய மருத்துவக் கவுன்சில் பாடத்திட்டப்படி, தேர்வை நடத்தி
கொடுக்கிறோம்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. வரும் கல்வி ஆண்டில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளில் சேர, 'நீட்' நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். மத்திய அரசின் இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., மூலம், 'நீட்' தேர்வு நடத்தப்படுகிறது. 'இதில் தேர்ச்சி பெற, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படிக்க வேண்டும்' என, மாணவர்களுக்கு, பல பள்ளிகள் ஆலோசனை தெரிவித்துள்ளன. அதனால், தமிழகம் உட்பட, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள், தங்களால் தேர்ச்சி பெற முடியுமா என்ற குழப்பத்தில் உள்ளனர். இந்நிலையில், 'நீட் தேர்வில் எந்த வகையான, சிலபஸ் பின்பற்றப்படுகிறது. தேர்வில் வெற்றி பெற, சி.பி.எஸ்.இ., புத்தகத்தை படிக்க வேண்டுமா' என, கோவை குனியமுத்துாரைச் சேர்ந்த, கலை ஆசிரியர், எஸ்.ஏ.ராஜ்குமார், சி.பி.எஸ்.இ., அலுவலகத்தில், தகவலறியும் உரிமை சட்டத்தில் கேள்வி கேட்டிருந்தார்.
அதற்கு, சி.பி.எஸ்.இ., அளித்துள்ள பதிலில், 'நீட் தேர்வை, சி.பி.எஸ்.இ., நேரடியாக நடத்தவில்லை. இந்திய மருத்துவக் கவுன்சில் உருவாக்கிய சிலபஸ் அடிப்படையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சக உத்தரவால், சி.பி.எஸ்.இ., நடத்தி கொடுக்கிறது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.