ஏடிஎம் மைய இயந்திரங்களில் கட்டணமின்றி ரொக்க டெபாசிட்: மத்திய அரசு

ஏடிஎம் மையங்களில் உள்ள டெபாசிட் செய்யும் இயந்திரங்கள் மூலம், எத்தனை முறை வேண்டுமானாலும் வாடிக்கையாளர்கள் கட்டணமின்றி ரொக்கமாக டெபாசிட் செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி மற்றும் தனியார் வங்கிகளில் மாதத்துக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே ரொக்கமாக கட்டணமின்றி டெபாசிட் செய்ய முடியும். குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் ரொக்க டெபாசிட் செய்தால், பல்வேறு விகிதங்களில் கட்டணம் வசூலிக்கப்படும். பாரத ஸ்டேட் வங்கியில் ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இதுகுறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: சேமிப்பு கணக்கு வைத்திருப்போர் மாதத்துக்கு 3 முறை மட்டும், பாரத ஸ்டேட் வங்கியில் கட்டணமின்றி ரொக்க டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் டெபாசிட் செய்தால், ரூ.50 கட்டணம் வசூலிக்கப்படும். இந்த எண்ணிக்கையை விட கூடுதல் எண்ணிக்கையில் டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்கள், ஏடிஎம் மையங்களில் இருக்கும் டெபாசிட் இயந்திரத்தைப் பயன்படுத்தலாம். அதற்கு கட்டணம் கிடையாது என்றார் கங்க்வார்.
நாட்டில் புழக்கத்தில் இருக்கும் பணம் குறித்த கேள்விக்கு, "கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி நிலவரப்படி, ரூ.13.35 லட்சம் கோடி புழக்கத்தில் உள்ளது' என்றார்.