ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு ஏப்ரல் 3-வது வாரத்தில் ஹால் டிக்கெட் வழங்க ஏற்பாடு: விண்ணப்பங்கள் மூலம் ரூ.33 கோடி வருமானம்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏப்ரல் 3-வது வாரத்தில் விண்ணப்பதாரர்களுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29, 30 தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த மார்ச் 6 முதல் 22-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் விற்பனை செய்யப்பட்டன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் மார்ச் 23-ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளப்பட்டன.
இடைநிலை ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு (தாள்-1) இரண்டு லட்சத்து, 37 ஆயிரத்து, 293 பேர்; பட்டதாரி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு, 5 லட்சத்து, 2 ஆயிரத்து 964 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இதன் மூலம் ரூ.33 1/2 கோடி வருமான தேர்வு வாரியத்திற்கு கிடைத்துள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் பெறப்பட்ட விண்ணப்ப படிவங்கள் உடனடியாக சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டன.
தற்போது, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் தகுதித் தேர்வு விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பணி முடிவடைந்ததும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் ஹால் டிக்கெட் ஏப்ரல் 3-வது வாரத்தில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும்.
விண்ணப்பதாரர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் தங்கள் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை குறிப்பிட்டு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த தேர்வுக்கான ஏற்பாடுகளை, பள்ளிக் கல்வி செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில், டி.ஆர்.பி., தலைவர் காகர்லா உஷா மேற்கொண்டு வருகிறார்.
வரும் கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்பாக அதாவது ஜூன் 1-ஆம் தேதிக்குள் ஆசிரியர் நியமன பணிகள் முடிக்கப்படும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஏற்கெனவே, அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.
எனவே, தகுதித் தேர்வு முடிவுகளும் வெகுவிரைவாக வெளியிடப்படும் எனத் தெரிகிறது. முன்பு நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களைக் கொண்டு 1,111 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
ஆனால், புதிதாக நடத்தப்பட உள்ள தகுதித் தேர்வு மூலம் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளில் எத்தனை காலியிடங்கள் நிரப்பப்படும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே, அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் பற்றிய விவரங்களையும் அரசு கேட்டுள்ளது. ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள தகுதித் தேர்வுக்கு 8 லட்சம் பேர் விண்ணப்பித்திருப்பதால் அதற்கேற்ப கணிசமான காலியிடங்கள் நிரப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தேர்வுக்காக 1,861 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 598 மையங்கள், ஏப்.29 தேர்வுக்கானவை. தற்போது, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தலைமையில், கண்காணிப்பாளர், பறக்கும் படையினருக்கான நியமனம் நடந்து வருகிறது.