ஆசிரியர்கள் திடீர் போராட்டம் : பிளஸ் 2 விடை திருத்தம் பாதிப்பு

ஆசிரியர்கள் திடீரென போராட்டம் நடத்தியதால், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி பாதித்தது. பிளஸ் 2 தேர்வு, மார்ச், 31ல் முடிந்து, விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்., ௫ல் துவங்கியது. 9.33 லட்சம் பேரின் விடைத்தாள்கள் திருத்தப்பட வேண்டும். நேற்று மூன்றாம் நாளாக, இப்பணி துவங்கிய போது, ஆசிரியர்கள் திடீரென போராட்டம் நடத்தினர். இதனால், வேலுார், திருச்சி, மதுரை உட்பட, பல மாவட்டங்களில், விடைத்தாள் திருத்தும் பணி பாதித்தது.


இது குறித்து, தொழிற்கல்வி ஆசிரியர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜனார்த்தன் கூறியதாவது:


பிளஸ் 2 விடைத்தாளில், தினமும், 20 தாள்கள் மட்டுமே வழங்கப்படும் என, தேர்வுத் துறை அறிவித்திருந்தது. ஆனால், தொழிற்கல்வி பாடங்களுக்கு மட்டும், தினமும், 24 தாள்களை திருத்த வைக்கின்றனர். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்திற்கு, 30 தாள்கள் தர கோரினோம்; 40 தாள்கள் வழங்கப்படுகின்றன. அதனால், கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டு, மதிப்பெண் போடுவதில் குளறுபடி ஏற்படுகிறது. விடைத்தாள் திருத்துவதற்கான ஊதியத்தை, தொழிற்கல்வி பாடங்களுக்கு, 7.50 ரூபாயிலிருந்து, 10 ஆகவும்; கம்ப்யூட்டர் சயின்ஸ்க்கு, 3.75 ரூபாயிலிருந்து, ஆறு ரூபாயாகவும் உயர்த்த கோரினோம். அதிகாரிகள் செவி சாய்க்காததால், போராட்டம் நடத்தினோம். ஜூனில் நடக்கும் துணை தேர்விலிருந்து, கோரிக்கையை நிறைவேற்றுவதாக, அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர், என்றார்.