அரசு ஊழியர் சங்கத்தினர் முதல்வருடன் சந்திப்பு

சென்னை: அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினர்.ஜெ., முதல்வராக இருந்த போது, அவரை, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளால், எளிதில் சந்திக்க முடியாத நிலை இருந்தது. ஆனால், தற்போதைய முதல்வர்
பன்னீர்செல்வத்தை, அனைத்து தரப்பினராலும், எளிதாக சந்திக்க முடிகிறது. சென்னை, தலைமை செயலகத்தில், தமிழ்நாடு தலைமை செயலக சங்கத் தலைவர் கணேசன் மற்றும் நிர்வாகிகள், முதல்வரை சந்தித்தனர். அவர்களை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் சண்முகராஜன் மற்றும் நிர்வாகிகளும், முதல்வரை சந்தித்து பேசினர். அவர்கள், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக, முதல்வர் உறுதி அளித்தார்.இந்த சந்திப்பின் போது, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் உடனிருந்தார்.